'ஆமா... இங்க யாரு என்னை ஓப்பனிங் ஆட கூடாதுனு சொன்னது?.. ஒழுங்கா கைய தூக்கிடுங்க'!.. ராஜஸ்தானை கதறவிட்ட 'டீ காக்'-இன் அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அடித்து நொறுக்கி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிபெற வைத்துள்ளார் குவிண்டன் டீ காக்.

14வது ஐபிஎல் சீசனின் 24வது லீக் போட்டி நேற்று டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 47 ரன்கள் குவித்திருந்தது. இதன்பிறகு பட்லர் 41 ரன்களும், ஜெய்ஸ்வால் 32 ரன்களும், சஞ்சு சாம்சன் 42 ரன்களும், சிவம் டூபே 35 ரன்களும் குவித்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் குவித்தனர்.

மும்பை பவுலர் ராகுல் சஹார் 2 விக்கெட்கள் மற்றும் போல்ட், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்து இருக்கிறார்கள். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட் ஆக பவர்பிளேவில் 1 விக்கெட் இழந்து 49 ரன்கள் குவித்தனர்.

இதன்பிறகு அதிரடியாக விளையாடிய டீகாக் 70 ரன்களும், க்ருணால் பாண்டியா 39 ரன்களும் குவித்ததன் மூலம் 18.3 ஓவரில் 172 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பாக கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்கள் மற்றும் முஸ்தாபிசுர ரஹ்மான் 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடி பேட்ஸ்மன் டீ காக் 50 பந்தில் 70 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். இதன்மூலம் 140 ஸ்ட்ரைக் ரேட் பெற்றிருக்கிறார். இவ்வாறு அதிரடியாக விளையாடியதற்காக இவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டீ காக் இதற்கெல்லாம் எனது பயிற்சியாளர் மற்றும் ரோகித் சர்மா தான் காரணம் என்று கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் "சென்னையை விட இங்கு சிறப்பாக இருந்தது. நான் நிலைமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். அதை நான் சரியாக செய்தேன். கோச் (ஜெய்வர்தனே) மற்றும் ரோகித் சர்மாவும் எங்களிடம் வந்து இன்று பாசிட்டிவாக இருக்க சொன்னார்கள். அதை தான் நாங்கள் இன்று செய்தோம். அதனால் இன்று வெற்றி பெற்றோம். நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டுடன் இருந்தேன். கடந்த காலத்தில் நான் செய்ததை மறுபரிசீலனை செய்து மீண்டும் இன்று செய்ய வேண்டியிருந்தது" என்று டீ காக் பேசியிருக்கிறார்.

இந்த சீசனின் முந்தைய ஆட்டங்களில் டீ காக் சோபிக்காத நிலையில், அவருக்கு பதிலாக கிறில் லின் ஓப்பனிங் ஆட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரைன் லாராவும் டீ காக்குக்கு பதிலாக மும்பை அணி கிறிஸ் லின்னை ஆடவைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று 70 ரன்களை அடித்து அதிரடியான கம்பேக் கொடுத்தது மட்டுமின்றி, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் டீ காக் தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்