'சல்லி... சல்லியா... நொறுக்கிட்டாங்களே!'... 'நம்பி எறக்கிவிட்டதுக்கு... உங்களால என்ன பண்ண முடியுமோ... அத பண்ணீட்டீங்க!'.. தரமான சம்பவத்தால்... மனமுடைந்த பாண்டிங்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மூன்று இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டு பின் ரிக்கி பாண்டிங் நம்பிக்கையை பெற்று மீண்டும் சிறப்பாக ஆடி வந்தனர்.

அந்த மூவரும் முக்கியமான பிளே-ஆஃப்பின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் அவர்கள் அணியைக் காப்பற்றுவார்கள் என எண்ணிய நிலையில், அவர்கள் மூவரும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவர்கள் சொதப்பியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மும்பை அணியிடம் டெல்லி மரண அடி வாங்கி தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.  

இந்த முதல் பிளே-ஆஃப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இந்த அளவுக்கு பெரிய ஸ்கோரை துபாய் ஆடுகளத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. 

மிகவும் கடினமான இலக்கான 201 ரன்களை நோக்கி ஆடத் துவங்கியது டெல்லி. அந்த அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது ட்ரென்ட் போல்ட் - பும்ரா வேகப் பதுவீச்சு ஜோடி. இருவரும் சேர்ந்து முதல் இரண்டு ஓவர்களில் ரன்னே கொடுக்காமல் மூன்று விக்கெட் வீழ்த்தினர். 

அவர்களிடம் சிக்கி வரிசையாக டக் அவுட் ஆன அந்த மூன்று வீரர்கள் ப்ரித்வி ஷா, அஜின்க்யா ரஹானே மற்றும் ஷிகர் தவான். இவர்கள் மூவருமே இந்த ஐபிஎல் தொடரில் தங்களின் மிக மோசமான பகுதியையும், சிறப்பான பகுதியையும் வெளிப்படுத்தி உள்ளனர். 

ப்ரித்வி ஷா தொடரின் துவக்கத்தில் சிறப்பாக ஆடி, பின் சொதப்பி வந்தார். அவரை அணியை விட்டு நீக்கினாலும் பின் வாய்ப்பு கொடுத்தார் ரிக்கி பாண்டிங். ஷிகர் தவான் துவக்கத்தில் நிதான ஆட்டம் ஆடி, பின் நான்கு போட்டிகளில் வரிசையாக கலக்கினார். 

தவான் வரிசையாக இரண்டு அரைசதம், இரண்டு சதம் அடித்து மிரள வைத்தார். ஆனால், அதன் பின் தொடர்ந்து இரண்டு டக் அவுட், ஒற்றை இலக்க ரன்கள் என மோசமான பார்முக்கு சென்றார். அவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் பாண்டிங். 

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, டெல்லி அணியில் முதலில் வாய்ப்பின்றி வெளியே இருந்தார். பின் அவருக்கும் வாய்ப்பு அளித்தார் பாண்டிங். அவர் தொடர்ந்து சொதப்பிய போதும், முக்கியமான போட்டியில் 60 ரன்கள் அடித்து தன் அணியில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தார். 

இப்படி மோசமான பார்மில் இருந்தும் பாண்டிங் இந்த மூவரை நம்பி அணியில் வாய்ப்பு அளித்தார். அவர்கள் மூவரும் வரிசையாக டக் அவுட் ஆனது ரிக்கி பாண்டிங்கிற்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டெல்லி அணி இந்தப் போட்டியில் தோற்றாலும் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்