'அந்த வேதனையான செய்திய கேட்டுட்டுதான்'... 'அவரு அப்படியொரு மேட்ச் விளையாடினாரு!!!'... 'வெற்றிக்குப்பின் உணர்ச்சிவசப்பட்ட ராகுல்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணி வீரர் மன்தீப் சிங் விளையாடிய விதம் குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்க்க, அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கும்போதே 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு தொடக்க ஆட்டக்காரர் மன்தீப் சிங் (66), கெயில் (51) ஆகியோருடைய ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்துள்ள நிலையில், அவர்களில் மன்தீப் சிங் 66 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். இதற்கு முன்னதாக கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் மன்தீப் சிங்கின் தந்தை ஜலந்தரில் காலமானதும், பயோ-பபுளில் இருப்பதால் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட மன்தீப் செல்லமுடியமால் காணொலி மூலம் பங்கேற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் தந்தை இறந்த நாளில்கூட சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மன்தீப் நேற்றைய போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் வானத்தை நோக்கிப் பார்த்து தனது தந்தைக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து போட்டிக்குபின் பேசியுள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், "ஒட்டுமொத்தமாகத் திட்டமிட்டு களமிறங்கி, நேர்மறையான எண்ணத்துடன் விளையாடி, அனைத்தையும் எங்களுக்குச் சாதகமாக மாற்றியுள்ளோம்.

அணி ஒவ்வொரு இக்கட்டான நேரத்தில் சிக்கும்போதும், அணியில் வேறுபட்ட வீரர்கள் பொறுப்பேற்று வெற்றிக்கு அழைத்துச் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. மேலும் நாம் பயோ-பபுளில் இப்படி ஒரு சூழலில் இருக்கும்போது நம்முடைய அன்புக்குரியவர்கள் இல்லாமல் போவது வேதனைக்குரியது. நம்மால் அந்தச் சடங்கில் பங்கேற்கவும் முடியாது. அந்தத் துயரத்தைத்தான் மன்தீப் சிங் அனுபவித்தார்.

தன் தந்தையின் மறைவுச் செய்தி கேட்டும் விளையாடினார். இன்று அவர் விளையாடிய விதம் என்னையும், அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. அத்துடன் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கும்போது, அணியில் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடுவதில் வியப்பு ஏதும் இல்லை. அணிக்காக கும்ப்ளே மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். எங்கள் வெற்றியின் பெரும் பங்கு எங்களுக்குப் பின்னால் இருந்து பணியாற்றும் பயிற்சியாளர்களையே சாரும்.

கெயில் தொடக்கத்தில் களமிறங்காதது கடினமான முடிவுதான். நான் பார்த்ததிலேயே இப்போதுதான் கெயில் மிகவும் ரன் பசியுடன் உள்ளார். அவர் அணியில் விளையாடாத போதும் ஓய்வு அறையில் அவரைப் பார்ப்பதே எங்களுக்கு பெரிய உத்வேகமாக இருக்கும். இப்போது இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுகிறோம். அடுத்த போட்டியைப் பற்றி நாளை சிந்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்