'பவுலிங்ல குறையா?.. யார் சொன்னது?.. நாங்க தோத்ததுக்கு காரணமே வேற'!.. களத்தில் நடந்ததை பொதுவெளியில் உடைத்த பண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணியுடனான அதிர்ச்சி தோல்விக்கான காரணம் குறித்து டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை மட்டுமே குவித்தது. துவக்க வீரராக ப்ரித்வி ஷா 2 ரன்களிலும், ஷிகர் தவான் 9 ரன்களிலும் அவுட்டாகி வெளியேற 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

அதன்பின்னர் ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து பண்ட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இணைந்தனர். சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆகி வெளியேற 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டது.

அப்போது அணியை சரிவில் இருந்து மீட்ட ரிஷப் பண்ட் மற்றும் லலித் யாதவ் ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய லலித் யாதவ் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் பண்ட் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

இறுதிவரை களத்தில் இருந்தால் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் டாம் கரன் 21 ரன்கள் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 15 ரன்கள் அடிக்க டெல்லி அணி தட்டுத்தடுமாறி 147 ரன்களை குவித்தது.

அதன் பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி துவக்கத்தில் பட்லர் 2 ரன்களிலும், வோரா 9 ரன்களிலும், சாம்சன் 4 ரன்களிலும், துபே இரண்டு ரன்களிலும் ஆட்டமிழக்க 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தள்ளாடியது.

பின்னர் மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் மட்டும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரும் 43 பந்துகளில் 62 ரன்களை குவித்து இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேற போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக மாறியது.

ஆனால் இறுதி நேரத்தில் ராகுல் திவாதியா மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி ராஜஸ்தான் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். அதிலும் குறிப்பாக கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளை சந்தித்து 4 சிக்சர்களுடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது, "இந்த போட்டியில் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் சரியான பணியே செய்தனர். எனினும், நாங்கள் இறுதிக்கட்டத்தில் அவர்களை வெற்றி பெற வைத்து விட்டோம். நாங்கள் இன்னும் சற்று சிறப்பாக பௌலிங் செய்திருக்க முடியும். ஆனால், இந்த போட்டியின் முடிவில் இது ஒரு முழுமையான கிரிக்கெட் ஆக அமைந்தது. இந்த போட்டியில் பனிப்பொழிவு முக்கிய பங்கினை வகித்தது.

மேலும், நாங்கள் பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம், இந்தப் போட்டியின் மூலம் நாங்கள் சில பாடங்களை கற்றுக் கொண்டோம். பவுலர்கள் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நாங்கள் அடுத்த போட்டியில் இந்த தவறுகள் இருந்து மீண்டு வருவோம் என நம்புகிறேன். பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது பாதியில் பந்து நின்று வரவில்லை". இரண்டாவது இன்னிங்சில் பனிப்பொழிவு ஆட்டத்தை மாற்றியது எனவும் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்