'என்ன தகுதி வேணும்?.. எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை அடையாளம் காட்டிய சேவாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனிக்கு பிறகு சிஎஸ்கேவின் கேப்டனாக வரும் தகுதி உள்ள வீரரை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐபிஎல் டி20 தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து கொடுத்தார். டேவிட் வார்னரை போலவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷ் பாண்டேவும் தன் பங்கிற்கு 61 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களத்திற்கு வந்த கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களும், கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 171 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 75 ரன்களும், டூபிளசிஸ் 56 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா (17), ஜடேஜா (7) கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஹைதராபாத் அணியுடனான சென்னை அணியின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமான ருத்துராஜ் கெய்க்வாட் குறித்து பேசியுள்ள சேவாக், ருத்துராஜ் கெய்க்வாட்டை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து சேவாக் பேசியதாவது, ருத்துராஜ் கெய்க்வாட்டை நான் இதுவரை நேரில் பார்த்து இல்லை, அவரது ஆட்டத்தையும் நேரில் பார்த்தது இல்லை. அடுத்த ஓரிரு வருடங்கள் தொடர்ந்து ருத்துராஜ் கெய்க்வாட் இதே போன்று விளையாடினால் சென்னை அணியின் கேப்டனாவதற்கான அனைத்து தகுதிகளையும் ருத்துராஜ் கெய்க்வாட் பெறுவார். அவரது ஆட்டம் தனித்துவமாக உள்ளது. மிக பொறுமையாக அதே வேளையில் அணியின் தேவைக்கு ஏற்பவும் கெய்க்வாட் விளையாடுகிறார். அடுத்தடுத்த வருடங்களிலும் ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்காக விளையாடும் பட்சத்தில் நிச்சயம் அவர் கேப்டனாவார்" என்று தெரிவித்துள்ளார்.

ருத்துராஜ் கெய்க்வாட் கடந்த சீசனின் ஆரம்பத்தில் சொதப்பினாலும், கடைசி 3 மேட்ச்களில் அரைசதம் அடித்து அசத்தினார். அதைப்போலவே, இந்த சீசனின் தொடக்கத்திலும் அவர் சொதப்பினார். ஆனால், சிஎஸ்கேவின் 4வது மேட்ச்சில் அதிரடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு பின்னர் சிஎஸ்கேவின் கேப்டனாக ரெய்னா அல்லது ஜடேஜா வர வேண்டும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படும் சூழ்நிலையில், ருத்துராஜை அடுத்த கேப்டனாக சேவாக் சுட்டிக்காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்