கடைசி ஓவர்ல அந்த ‘தப்பை’ செஞ்சிருக்க கூடாது.. நூலிழையில் பறிபோன வெற்றி.. வெறுத்துப்போய் கே.எல்.ராகுல் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் உருக்கமாக பேசியுள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரின் 32-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் (PBKS), சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (RR) மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 185 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 ரன்களும், மஹிபால் லோமோர் 43 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஆரம்பமே கே.எல்.ராகுலும் (49 ரன்கள்), மயங்க் அகர்வாலும் (67 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் (26 ரன்கள்) மற்றும் நிககோலஸ் பூரன் (32 ரன்கள்) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் பஞ்சாப் அணியே இப்போட்டியில் வெற்றி பெறும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் அணி ரன்கள் செல்வதை கட்டுப்படுத்தியது. அதனால் கடைசி ஓவரில் 4 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணி இருந்தது. அப்போது ராஜஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்தி தியாகி கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தவறவிட்டது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் (KL Rahul), ‘இந்த தோல்வியை என்னால் ஜீரணிக்கவே முடிவில்லை. இதற்கு முன்பும் இதேபோல் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் அதிலிருந்து இன்னும் நாங்கள் பாடம் கற்கவில்லை என தோன்றுகிறது. இப்போட்டியை 18-வது ஓவரிலேயே முடித்து விடுவோம் என்று நான் நம்பினேன். ஆனால் ஆட்டம் அப்படியே மாறிவிட்டது.

ஒரு சில நேரங்களில் தங்களது இயல்பான ஆட்டத்தை விளையாடாமல், தூக்கி அடிக்க முயற்சிப்பார்கள். அதில் ரன்கள் கிடைக்கவில்லை என்றால் பதற்றம் ஏற்படும், கடைசி ஓவரில் அந்த தவறை செய்ததுதான் விக்கெட்டுகள் செல்ல காரணமாக அமைந்தது. இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். ஒரு விக்கெட் போட்டியை மாற்றிவிடும், அது இப்போட்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது’ என கே.எல்.ராகுல் சோகமாக பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்