VIDEO: ‘என்ன எடுத்து கொடுப்பாருன்னு பாத்தா பாக்கெட்ல போட்டாரு’!.. மறந்துபோய் சஞ்சு சாம்சன் செஞ்ச செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டாஸ் போட்ட பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை அறிமுக வீரர் சேத்தன் சகாரியா 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும், ரியான் பராக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகியும், மனன் வோஹ்ரா 12 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன.

இந்த நிலையில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. அப்போது ஸ்டிரைக்கில் இருந்த சஞ்சு சாம்சன் அடித்த பந்தை தீபக் ஹூடா கேட்ச் பிடித்து அவுட் செய்தார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறிமுக கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் போட்டு முடித்த பின், அந்த நாணயத்தை மறந்துபோய் தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். இதனை உடனே உணர்ந்த அவர், மேட்ச் ரெஃப்ரியை பார்த்து புன்னகை செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்