‘ஆமா, அதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்’!.. தொடர் தோல்வி கொடுத்த வலி.. முக்கிய வீரர்களை ஓபனாகவே ‘குத்திக்காட்டிய’ ரோஹித்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா விளக்கியுள்ளார்.

ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார். டெல்லி அணியைப் பொறுத்தவரை ஆவேஷ் கான் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் மும்பை தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ‘இந்த மைதானம் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். இங்கு நடந்த நிறைய போட்டிகளை பார்த்துள்ளோம். இந்த மாதிரியான மைதானத்தில் நிறைய ரன்கள் அடிக்க முடியாது என்று தெரியும், அதனால் நன்றாக தயாராகி வந்தோம்.

இந்த மைதானத்தில் 170-180 ரன்கள் அடிப்பது கஷ்டம் தான், சிறப்பாக விளையாடி இருந்தால் 140 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் அதுகூட எங்களால் அடிக்க முடியாததற்கு, நாங்கள் பேட்டிங் நன்றாக செய்யவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் பார்ட்னர்ஷிப் தான் மிகவும் முக்கியம். ஆனால் அப்படியொரு பார்ட்ரனர்ஷிப் யாரும் அமைக்கவில்லை.

எல்லாரும் சொல்வதுபோல், மிடில் ஆர்டர் சரியில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதை எங்களால் முடிந்த அளவுக்கு சரிசெய்ய முயன்று வருகிறோம். எங்கள் அணியின் பலத்திற்கு ஏற்றார் போல் விளையாடவில்லை என்பதுதான் உண்மை. அடுத்த வரவுள்ள போட்டிகளில் நன்றாக விளையாட முயற்சி செய்வோம்’ என ரோஹித் ஷர்மா சோகமாக பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் பாதியில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் மிடிர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதில், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, பொல்லார்டு போன்ற வீரர்கள் முக்கியமான போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதில் இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்