‘உங்கள வச்சுகிட்டு இந்த மனுஷன் படுற பாடு இருக்கே..!’ ரிஷப் பந்தை தொடர்ந்து ‘மற்றுமொரு’ வீரருக்கு கொரோனா.. பெரும் சிக்கலில் கேப்டன்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பந்தை தொடர்ந்து மற்றுமொரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்திய வீரர்கள் இருவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனை அடுத்து உடனடியாக இருவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் மீண்டும் பரிசோதனை நடத்தியதில் ஒருவருக்கு மட்டும் நெகட்டிவ் என வந்துள்ளது. மற்றொரு வீரருக்கு மறுபடியும் கொரோனா பாசிடிவ் என்றே வந்துள்ளது. அதனால் அவர் மீண்டும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் நடந்த யூரோ கால்பந்து போட்டியை நேரில் பார்க்க சென்றார். அப்போது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற எதையும் பின்பற்றவில்லை.

முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கூட்டம் அதிகம் உள்ள இடங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதி, மக்கள் அதிகமாக கூடும் விளையாட்டு போட்டிகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தார். கேப்டன் விராட் கோலியும் இதையேதான் வீரர்களுக்கு கூறியிருந்தார். ஆனால் ரிஷப் பந்த் இதனை மீறி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான சாஹாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு விக்கெட் கீப்பர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக, இங்கிலாந்து தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வீரர்களாக இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கலை இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்குமாறு தேர்வுக்குழுவிடன் கோலி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இதனை தேர்வுக்குழு தலைவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இப்படி உள்ள சுழலில் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது, இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்