விவிஎஸ் லக்‌ஷ்மண் கூட ‘இதைதான்’ சொன்னாரு.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துக்கு இருக்கும் ‘சாதகமான’ சூழல்.. யுவராஜ் சிங் அதிரடி கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ம் தேதி இங்கிலாந்து சென்ற இந்திய அணி வீரர்கள், தற்போது அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் இங்கிலாந்துக்கு முன்னமே சென்ற நியூஸிலாந்து அணி, அங்கு இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 போட்டிகள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் முதல் டெஸ்டில் தோற்றாலும், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்து மீள வாய்ப்பு கிடைக்கும். நியூஸிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதனால் மைதான அனுபவத்தில் இந்தியாவை விட அவர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள்.

பேட்டிங்கை ஒப்பிடுகையில், நியூஸிலாந்தை விட இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமை மிக்கது. ரோஹித் ஷர்மா இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவமிக்கவராக மாறியுள்ளார். ரோஹித் ஷர்மாவும், சுப்மான் கில்லும் இணைந்து இங்கிலாந்து மண்ணில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியது இல்லை. டியூக்ஸ் வகை பந்து ஆரம்பத்திலேயே ஸ்விங் ஆகும் என்பதை அவர்களுக்கு தெரியும். அதனால் அங்குள்ள கால நிலைக்கு தகுந்தபடி சீக்கிரமாக பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என யுவராஜ் சிங் கூறினார். முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் இதே கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய யுவராஜ் சிங், ‘இங்கிலாந்து மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியாக நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது காலையில் மைதானம் வேகப்பந்துக்கு சாதமாக இருக்கும். அதனால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். மதியத்துக்கு பிறகுதான் பேட்ஸ்மேன்களால் வேகமாக ரன்களை எடுக்க முடியும். அதேபோல் தேனீர் இடைவேளைக்கு பிறகு பந்து மீண்டும் ஸ்விங் ஆகும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த விஷயங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டால் வெற்றிகரமாக செயல்பட முடியும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்