‘சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிருக்காப்ல’!.. இந்த சீரிஸோட ‘சைலண்ட் ஹீரோ’ இவர்தான்.. புகழ்ந்து தள்ளிய ஜாகீர்கான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ‘சைலண்ட் ஹீரோ’ என இளம்வீரர் ஒருவரை ஜாகீர்கான் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கண்க்கில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.

இதில் 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது. கடந்த சனிக்கிழமை இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 80 ரன்களும், ரோஹித் ஷர்மா 64 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும், ஜாஸ் பட்லர் களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் ஓவரில், ஜேசன் ராய் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மலன் மற்றும் ஜாஸ் பட்லர் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

அந்த சமயத்தில் புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஜாஸ் பட்லர் (52) அவுட்டானார். இதனை அடுத்து ஷர்துல் தாகூர் வீசிய ஓவரில் டேவிட் மலன் (68) மற்றும் ஜானி பேர்ஸ்டோ (7) அடுத்தடுத்து அவுட்டாகினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் 1 ரன்னில் அவுட்டாகினார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாக, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரை ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்கான் Cricbuzz சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஷர்துல் தாகூரை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘அதிக சுறுசுறுப்புடன் இந்திய அணியின் பெரிய வீரர்கள் உள்ளனர். ஆனால் ஷர்துல் தாகூரை நீங்கள் கவனித்திருந்தால், சத்தமே இல்லாம தனது வேலையை செய்துள்ளார். இந்த தொடரின் சைலண்ட் ஹீரோ இவர்தான்’ என ஷர்துல் தாகூரை புகழ்ந்து ஜாகீர்கான் பேசியுள்ளார்.

இந்த தொடரில் மொத்தமாக 8 விக்கெட்டுகளை ஷர்துல் தாகூர் எடுத்துள்ளார். அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது பல முக்கிய விக்கெட்டுகளை ஷர்துல் தாகூர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்