‘3 ஓவர், 3 விக்கெட், ஒரு ரன் கூட போகல’!.. இந்திய பேட்டிங் ஆர்டரை ‘சுக்குச்சுக்கா’ நொறுக்கிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது பகலிரவு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் சிப்லே களமிறங்கினர். இதில் சிம்லே டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

இதனை அடுத்து வந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 17 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இவரது விக்கெட்டை கேப்டன் கோலி அக்ரோஷமாக கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனால் 112 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 53 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் பட்டேல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மன் ஹில் களமிறங்கினர். இதில் சுப்மன் ஹில் 11 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த புஜரா டக் அவுட்டாகி அதிர்ச்சிளித்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா-விராட் கோலி கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் கோலி 27 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய ரஹானே (7), ரிஷப் பந்த் (1), அஸ்வின் (17) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். அடுத்ததாக வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் டக் அவுட்டாகினர். கடைசியாக களமிறங்கிய பும்ரா 1 ரன்னில் அவுட்டாக, 145 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை, அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 5 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்சர் 1 விக்கெட்டும் எடுத்தனர். அதில் ஜோ ரூட், தான் வீசிய முதல் 3 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் 3 (ரிஷப் பந்த், வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்) விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். மொத்தமாக 6.2 ஓவர்கள் வீசிய ஜோ ரூட் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட்டானதுக்கு பழிக்குபழி போல தொடர்ந்து இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அசத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்