அவங்க தெரிஞ்சே இப்படி செஞ்சாங்களா..? பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக போட்டோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 364 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 391 ரன்களை எடுத்தது.

இந்த நிலையில் இந்திய அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பினர். அதில் ரஹானே மட்டுமே 61 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த், ஜடேஜா, இஷாந்த் ஷர்மா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 209 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.

இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த முகமது ஷமி மற்றும் பும்ரா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் முகமது ஷமி அரைசதமும் (56 ரன்கள்), பும்ரா 34 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த கூட்டணியை நீண்ட நேரமாக பிரிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதனால் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இங்கிலாந்து வீரர் ஒருவர் தனது ஷூவால் பந்தை மிதித்து சேதப்படுத்துவது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்