கேன் வில்லியம்சனை அவுட்டாக்க ‘மாஸ்டர்’ ப்ளான்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இப்பவே ‘ஸ்கெட்ச்’ போடும் இந்திய இளம் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுக்க திட்டம் வகுத்திருப்பதாக முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இதில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர்த்து விளையாட உள்ளது. இப்போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளை இவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை அவுட்டாக்க வைத்திருக்கும் திட்டம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘கேன் வில்லியம்சன் கிரிக்கெட் உலகில் ஒரு மிகச்சிறந்த வீரர். அவரை அவுட்டாக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனாலும் அவரை வீழ்த்த என்னிடம் தெளிவான திட்டம் இருக்கிறது. சோர்வடையாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பந்துவீச முயற்சிப்பேன். அப்படி அவரை ரன் அடிக்க விடாமல் நெருக்கடியை உண்டாக்கினால், அவர் அடித்து ஆட வேண்டிய சூழல் ஏற்படும். அப்போது நான் அவரை அவுட்டாக்கி விடுவேன்’ என முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இங்கிலாந்து மைதானங்களில் பந்து ஸ்விங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். இதனால் பேட்ஸ்மேன்கள் நன்றாக முன்னால் வந்து விளையாடும்படி அதிக அளவிலான பந்துகளை நான் வீசுவேன். ஐபிஎல் தொடருக்கு பிறகு நாங்கள் எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் தற்போது இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி விளையாட உள்ளது. இது அவர்களுக்கு சாதகமான விஷயம்தான், ஆனாலும் நாங்கள் சரியான பயிற்சியுடன் நியூஸிலாந்து அணியை பலமாக எதிர்கொள்வோம்.

தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. அணியில் உள்ள ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச கூடியவர்கள். நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ என முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்