‘எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல’!.. ‘நாங்க தோத்ததுக்கு இதுதான் காரணம்’.. கே.எல்.ராகுல் சோகமாக சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 31 ரன்களும், கிறிஸ் ஜோர்டன் 30 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி, 16.4 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் 47 ரன்களும், ராகுல் திருப்பதி 41 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், ‘இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து என்ன கூறுவதென்றே தெரியவில்லை. நாங்கள் இன்னமும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். அதேபோல் பேட்டிங்கில் இன்னும் நிறைய விஷயங்களை முன்னேற்ற வேண்டி இருக்கிறது. எங்கள் வீரர்களும் இதைப் புரிந்துக்கொண்டு விளையாட வேண்டும்.

இப்போட்டியில் எளிதாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்ததுதான் எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த மைதானத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து சில ஷாட்டுகளை விளையாட முடியவில்லை. மற்ற அணிகள் இந்த மைதானத்தில் விரைவாக அடாப்ட் செய்து கொள்ளும், இருப்பினும் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த  நாங்கள் முயற்சி செய்வோம்’ என்று கே.எல்.ராகுல் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்