‘தனி ஒருவனாக போராடிய மனுசன்’!.. சூப்பர் ஓவரில் தோற்றப்பின் கேன் வில்லியம்சன் ‘உருக்கமாக’ சொன்ன ஒரு வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து கேன் வில்லியம்சன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரீத்வி ஷா 53 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இதில் வார்னர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா ரன் அவுட் செய்தார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன்-ஜானி பேர்ஸ்டோ கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் 38 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோ, ஆவேஷ் கானின் ஓவரில் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய விராட் சிங் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த கேதர் ஜாதவ் 9 ரன்னில் அவுட்டாகினார். இவர்களைத் தொடர்ந்து அபிஷேக் ஷர்மா 5 ரன்னிலும், ரஷித் கான் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

தொடர்ந்து விக்கெட்டுகள் சென்று கொண்டிருந்தாலும், தனி ஆளாக கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 42 பந்துகளில் தனது அரைசதத்தை (51 ரன்கள்) அடித்தார். அப்போது கடைசி 24 பந்துகளில் 43 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஹைதராபாத் அணி இருந்தது. அப்போது 19-வது ஓவரில் விஜய் சங்கர் (8 ரன்) போல்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வில்லியம்சன்-சுஜித் ஜோடி களத்தில் இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்து ஓய்டான செல்ல அடுத்த பந்து பவுண்டரி, அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்து சுஜித் ஸ்ட்ரைக்கை வில்லியம்சன் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் சுஜித், சிக்சர் மற்றும் சிங்கிள் எடுத்தார். இதனை அடுத்து கடைசி 2 பந்தில் 2 ரன் மட்டுமே சென்றது. இதனால் 20 ஓவர்களில் 159 ரன்கள் ஹைதராபாத் அணி எடுத்தது.

இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய கேன் வில்லிம்சன், ‘சூப்பர் ஓவர் என்றதும் சோர்வாகி விட்டேன். எதிர்பாராத விதமாக போட்டி முடிவில் டை ஆகிவிட்டது. நிச்சயமாக சொல்வேன், இது எங்களுக்கு சிறந்த போட்டிதான். நிறைய நல்லவை நடந்துள்ளன. தற்போது அடுத்து போட்டியில்தான் கவனம் உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்