‘அவரும் மனுசன் தாங்க.. ரன் மெஷின் கிடையாது’.. கோலி டி20 உலகக்கோப்பையை ஜெயிக்கணும்னா.. அது அந்த ‘ரெண்டு’ பேர் கையிலதான் இருக்கு.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள இந்திய அணி குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை (23.10.2021) முதல் சுப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த டி20 உலகக்கோப்பையை விராட் கோலி (Virat Kohli) தலைமையிலான இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் டி20 கிரிக்கெட்டுக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுகிறார். இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றதில்லை.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் (Jonty Rhodes), இந்திய அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், ‘எல்லோரும் விராட் கோலியை அதிக ரன்களை குவிக்க வேண்டும் என கூறுகின்றனர். அவரும் மனிதர்தான், ரன் மெஷின் கிடையாது. அவரால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களை எடுக்கிறார்.

அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை எப்போதும் பூர்த்தி செய்ய முயன்று வருகிறார். டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமென்றால், விராட் கோலி மட்டுமல்ல அணியில் உள்ள அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்’ என ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) தான் இந்திய அணிக்கு கீ (Key) ப்ளேயராக இருப்பார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் அனுபவம் கொண்டுள்ள ரோஹித் ஷர்மா, டி20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர் மட்டும் நிலைத்து நின்றுவிட்டால், பெரிய அளவில் ரன்களை குவித்து விடுவார். அதனால் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம்தான் மிகவும் முக்கியம்.

அதேபோல் பவுலிங்கில் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடிய ஒரு வீரர் யார் என்றால் அது பும்ரா (Bumrah) தான். இவர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். பவர் ப்ளேவில் இரண்டு ஓவர்களும், டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களும் பும்ரா வீசினால் நிச்சயம் எதிரணி ரன்களை குவிக்க தடுமாறும். அதனால் ரோஹித் ஷர்மாவும், பும்ராவும் சிறப்பாக விளையாடினால் இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது’ என ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்