'அரைசதம் அடித்ததும் ஹர்திக் செய்த காரியத்தால்'... 'நெகிழ்ந்துபோய் நின்ற கேப்டன்!!!'... 'சர்ச்சைக்கு நடுவிலும் குவியும் பாராட்டுக்கள்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா செய்த காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பார்மிற்கு திரும்பி மிகவும் அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடக்கம். இந்நிலையில் இந்த போட்டியில் அரை சதம் அடித்த பின் பாண்டியா முட்டி போட்டு கையை உயர்த்தி அதை கொண்டாடினார். #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்படி பாண்டியா செய்துள்ளார்.

முன்னதாக அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு போலீசாரால் கொல்லப்பட்டதில் இருந்து #BlackLivesMatter பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க பல பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டு கைகளை உயர்த்தி #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல விளையாட்டு போட்டிகளில் #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவாக சிறப்பு நிமிடங்கள் கூட ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இதுகுறித்து தற்போதுவரை எதுவும் பேசப்படாமல் இருந்தது.

இதையடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சிலர் இதுபற்றி கோரிக்கைகள் வைத்தும் பிசிசிஐ இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடாத சூழலில்தான் பாண்டியா இதற்கு ஆதரவாக முட்டி போட்டு கைகளை உயர்த்தினார். அதைப்பார்த்து நெகிழ்ந்துபோன பொல்லார்டு மிகவும் மகிழ்ச்சியுடன் கைதட்டி அவரைப் பாராட்டியுள்ள நிலையில், பாண்டியாவின் இந்த துணிச்சலான செயலை சமூக வலைத்தளங்களிலும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் அதே நேரம் ஒரு சிலர் இது பிசிசிஐ விதிக்கு உட்பட்டதா, இப்படி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா எனவும், முதலில் இந்தியாவிலுள்ள பிரச்சனைகளைப் பாருங்கள் எனவும் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர். இருப்பினும் அவற்றை எல்லாம் மீறி கறுப்பின மக்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்துள்ள பாண்டியாவை பலரும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்