முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரை கற்களால் தாக்கிய மர்ம நபர்கள்.. தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா, சமீபத்தில் பாஜக கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், மோய்னாப் என்ற தொகுதியில் பாஜக சார்பில் அசோக் திண்டா போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அசோக் திண்டாவின் வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த அசோக் திண்டாவின் மேனேஜர், மர்ம நபர்கள் சிலர் அசோக் திண்டாவின் வாகனத்தை திடீரென கற்களால் தாக்கியதாகவும், இதில் அசோக் திண்டாவிற்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சாலையின் அனைத்து வழிகளிலும் அவர்கள் திரண்டதால் தங்களால் தப்பிக்க முடியவில்லை என அசோக் திண்டாவின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான முழு அறிக்கையையும் உடனடியாக சமர்பிக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரது கார் கதவை திடீரென மூடியதால், மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டாவை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்