‘திறமையாக திட்டம் போட்டு’... ‘ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிச்சுருக்காரு’... ‘கொஞ்சம் கூட மனதில் சுமையில்ல’... ‘புகழாரம் சூட்டிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வரும் ரஹானேவின் கேப்டன்சியை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்ந்து பேசியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரில், அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து மோசமான சாதனை புரிந்தது. இதையடுத்து, பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான மெல்போர்னில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகிய மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், ரஹானே கேப்டன் பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார்.

2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மெல்போர்ன் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்னில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழப்பது நேற்றுதான் முதல் முறையாகும்.

இந்திய அணிக்குத் தலைமை ஏற்று செயல்பட்ட ரஹானே தொடக்கத்திலிருந்து அருமையான கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்தினார். 12-வது ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டுவந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளைச் சாய்த்தார். அறிமுக வீரர் முகமது சிராஜை தொடக்கத்திலேயே பந்துவீச அழைக்காமல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறும்போது, சிராஜை பந்துவீசச் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைக் குழப்பும் வகையில் அவ்வப்போது ஃபீல்டிங் முறையை மாற்றியும் அவர்களை ரன்கள் அடிக்கவிடாமல் ரஹானே செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான திட்டத்தைக் கச்சிதமாகச் செயல்படுத்திய ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான்கள், வீரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமண், ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங் ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கதத்தில், ‘ரஹானேவிடம் இருந்து ஸ்மார்ட்டான ஃபீல்டிங் அமைப்பு முறை, பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியதைக் கண்டேன். அஸ்வின், பும்ரா, சிராஜ் ஆகியோரின் பந்துவீச்சு அபாரம். முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய அணியை 195 ரன்களில் சுருட்டியது இந்திய அணியின் மிகப்பெரிய முயற்சி. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

வி.வி.எஸ்.லட்சுமண் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘இந்திய அணி சிறப்பாக விளையாடியுள்ளது. பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை அருமையாகச் செயல்பட்டுள்ளார்கள். இரு அறிமுக வீரர்களுமே நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அதிலும் ரஹானேவின் கேப்டன்ஷிப் அற்புதம். அடிலெய்ட் தோல்வி குறித்த எந்தச் சுமையையும் மனதில் வைக்காமல் விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே பதிவிட்ட கருத்தில், 'மெல்போர்ன் மைதானத்தில், கிரிக்கெட்டில் பயங்கரமான நாள். நீண்ட காலத்துக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தை அருமையாகத் தயாரித்த களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகள். இதுபோன்றே அனைத்து ஆடுகளங்களையும் அமையுங்கள். இந்தியப் பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்து வீசினார்கள். அதிலும் கேப்டன் ரஹானே அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். இந்திய அணி நாளை முழுவதும் பேட் செய்ய முடியுமா?' எனத் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் அளித்துள்ள பேட்டியில், ‘ரஹானேவின் கேப்டன்சி இதுவரை மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மிகவும் நன்றாக திட்டங்களை வகுக்கிறார் . கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் இந்தியா எப்படி ஆடும் என்று அச்சம் இருந்தது. இந்திய அணி மீண்டு வருமா என்று கேள்வி இருந்தது. முக்கியமாக இந்திய அணியில் கேப்டன் கோலி இல்லாத போது இந்திய அணி எப்படி ஆடும் என்ற கேள்வி இருந்தது. ஆனால் யாரும் நினைத்து பார்க்காத வகையில் ரஹானே கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

ரஹானேவிற்கு கீழ் இந்தியா அதிரடியாக ஆடியது. கடந்த போட்டியை விட இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக இருந்தது. முக்கியமாக ரஹானே ஓவர் கொடுத்த விதம், பீல்டிங் செட்டப் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் திட்டங்கள் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. ரஹானே பிளான் செய்யும் விதம் சிறப்பாக இருந்தது. ஒரு கேப்டனாக இருக்கும் போது அணியில் இருக்கும் வீரர்கள் உங்கள் திட்டத்தை மதிக்க வேண்டும்.

ரஹானே அதை சிறப்பாக செய்ய வைக்கிறார். ஸ்மித் விக்கெட் எல்லாம் திறமையான திட்டம் வகுத்து எடுக்கப்பட்ட ஒன்று. பல திட்டங்களை ரஹானே வகுத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு சிறப்பாக ஆட முடியாது. ரஹானேவின் திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்தும் விதத்தை பாராட்ட வேண்டும்’ என்று பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். ரிக்கி பாண்டிங் பயிற்சி கொடுக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில்தான் ரஹானேவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்