டாஸ் போடுவதற்கு ‘90 நிமிடத்துக்கு’ முன் நிறுத்தப்பட்ட போட்டி.. அப்படி என்னதான் நடந்தது..? ஒரு வழியாக ‘மவுனம்’ கலைத்தார் கங்குலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பரம்பருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக திடீரென தகவல் வெளியானது. அதனால் டாஸ் போடுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த ஹோட்டலில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோர் பங்கேற்றனர். பயோ பபுளை மீறி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ரவி சாஸ்திரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் பிசியோ நிதின் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதனால் யோகேஷ் பரம்பர் பிசியோவாக செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் யோகேஷ் பரம்பருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், மான்செஸ்டரில் நடக்க இருந்த கடைசி டெஸ்ட் நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ஐபிஎல் தொடரை மனதில் வைத்துதான் இப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து முதல்முறையாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘அணியின் பிசியோ யோகேஷ் பரம்பருக்கு தொற்று இருப்பது தெரிந்தபின் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அதனால் வீரர்கள் அனைவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டனர். இதற்காக வீரர்களை நாம் குறை கூற முடியாது.

பிசியோ யோகேஷ் பரம்பர் வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்ட பின் அனைத்து வீரர்களுடனும் யோகேஷ் பரம்பர் எளிதாகப் பழகினார். இதனால்தான் வீரர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. தாங்களும் யோகேஷ் பரம்பருடன் நெருங்கிப் பழகினோமே, தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என வீரர்கள் அச்சமடைந்துவிட்டனர்.

இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரைவில் ஆலோசனை நடத்துவோம். கடைசி டெஸ்ட் போட்டி ரத்துக்கும், ஐபிஎல் தொடருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பொறுப்பற்ற முறையில் பிசிசிஐ ஒருபோதும் செயல்படாது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனிலும் பிசிசிஐ அதிக அக்கறை வைத்துள்ளது’ என கங்குலி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்