'அவங்க கால்பந்து காதலர்கள் ஆச்சே, எப்படி சம்மதிச்சாங்க'... 'பார்சிலோனாவில் முதல் கிரிக்கெட் மைதானம்'... 'பின்னணியில் பெண்கள்'.. சுவாரசிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்பந்து நகரமான பார்சிலோனாவில் விரைவில் கிரிக்கெட் மைதானம் வர உள்ளது.

பார்சிலோனா என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது கால்பந்து மட்டுமே. ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா நகரையும் கால்பந்தையும்  நிச்சயம் பிரிக்கவே முடியாது. அதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் லியோனல் மெஸ்ஸி. இப்படி கால்பந்து மீது தீராத காதல் கொண்ட பார்சிலோனாவில் விரைவில் கிரிக்கெட் மைதானம் வர இருக்கிறது என்பது பலருக்கும் நிச்சயம் ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கும்.

அதேநேரத்தில் பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானம் சாத்தியமானதில் இருக்கும் பின்னணி சற்று சுவாரஸ்யம் நிறைந்தது ஆகும். பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானம் வருவதில் பின்னணியிலிருந்தது பெண்கள் தான். சமீபத்தில் பார்சிலோனா அரசு தனது மக்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தியது.

சைக்கிளிங் விளையாட்டுக்கான லேன்கள் முதல் பல்வேறு விதமான மைதானங்கள் வரை எந்த விளையாட்டு வசதியாகக் கட்டமைப்புகளைக் கொண்டுவரலாம் என்பது தொடர்பாகத் தேர்ந்தெடுக்கவே அந்த வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு வசதியை அல்லது மைதானத்தை ஏற்படுத்த மிகப்பெரிய தொகை ஒன்றையும் அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, 822 விதமான விளையாட்டு வசதிகள் கொண்ட பட்டியலில், கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள். இதனால் கிரிக்கெட் விளையாட்டுக்காக 30 மில்லியன் யூரோ மதிப்புள்ள நிதி ஒதுக்கப்பட இருக்கிறது.

அதேநேரத்தில் மக்கள் இந்த முடிவுக்குவர காரணமாக இருந்தது இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. இதற்குக் காரணமாக இருந்த பெண்களில் ஒருவரான 20 வயதுடைய ஹிஃப்ஸா பட் (Hifsa Butt) என்பவர் இது தொடர்பாகப் பேசும்போது, "இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

இதற்கு வித்திட்டவர் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். அவர்தான், `பள்ளியில் தொடங்க இருக்கும் கிரிக்கெட் கிளப்பில் சேருவதற்கு அவர் அழைப்பு விடுத்தபோதுதான் இவை ஆரம்பித்தது" என்று கூறினார். இப்படி ஆரம்பித்த பயணம், தற்போது கிரிக்கெட் மைதானம் கட்டும் அளவுக்கு வந்துள்ளது.

மற்ற செய்திகள்