'ஐபிஎல்' முன்னாடி வரைக்கும், 'இந்தியா'வ ஏளனமா பாத்தாங்க.. இப்போ என்னாச்சுன்னு தெரியுதா??.." 'ராபின்சன்' விவகாரம்.. 'இங்கிலாந்து' அணியை விளாசிய 'முன்னாள்' வீரர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து வீரர் ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இருந்த நிலையில், 7 விக்கெட்டுகளும், 42 ரன்களும் எடுத்து அசத்தியிருந்தார்.

கிரிக்கெட் உலகில் சிறப்பான அறிமுகத்தை ராபின்சன் கொடுத்திருந்தாலும், 8 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 18 வயதில் இனவெறி மற்றும் பாலியல் தொடர்பாக செய்திருந்த ட்வீட்கள், இணையதளங்களில் வைரலாகி அவர் மீது அதிக விமர்சனத்தைக் கிளப்பியிருந்தது. இதற்காக மன்னிப்பும் ராபின்சன் தெரிவித்திருந்த நிலையில், அவரது செயலுக்கு நடவடிக்கை எடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், அவரை சஸ்பெண்ட் செய்திருந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூட, ராபின்சனுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஃபரூக் என்ஜினியர் (Farokh Engineer), ராபின்சன் விவகாரத்தில், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் எடுத்த முடிவு சரி தான் என தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் பேசிய அவர், 'ராபின்சன் 18 வயதில் அப்படி ட்வீட் செய்திருந்தார் எனக் கூறுவதே மிகவும் அபத்தமானது. அந்த வயது என்பது, தனிநபர் பொறுப்பேற்க வேண்டிய வயது. கிரிக்கெட் வீரர்கள் இதிலிருந்து தப்பிக்க நினைத்தால், விளைவுகள் மோசமாக இருக்கும். ஆசிய மக்களுக்கு எதிராக மட்டும் அனைத்து வகையிலான கருத்துக்களையும் கூறுவார்கள். அதனையும் இனி மொட்டிலேயே நறுக்க வேண்டும்.

நான் அவர்களை ஆயுட்காலம் வரை தடை செய்யக் கூறவில்லை. ஆனால், அவர்களுக்கு மிகப்பெரிய அபராதத்தை வழங்க வேண்டும். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் அல்லது முதல் தர கிரிக்கெட்டில் இருந்து சில காலம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' என்றார்.

மேலும், இங்கிலாந்தில் தான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் பற்றி பேசிய ஃபரூக், 'நான் முதன் முதலில் கவுண்டி கிரிக்கெட் ஆட இங்கிலாந்து வந்தடைந்த போது, "அவர் இந்தியாவைச் சேர்ந்தவரா?" என்ற கேள்விகள் அதிகம் வந்தது. அது மட்டுமில்லாமல், ஒன்றிரண்டு முறை, இனவெறி கருத்துக்களையும் நான் எதிர்கொண்டேன்.

இந்தியாவில் இருந்து வந்ததால், எனது ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தனர். பெரும்பாலான ஆங்கிலேயர்களை விட, எனது ஆங்கிலம் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன். எனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையுடன் என்னை நான் நிரூபித்தும் காட்டினேன். இந்தியாவையும் பெருமை கொள்ளச் செய்தேன்.

அதன் பிறகு, தற்போது வந்த ஐபிஎல், அனைத்தையும் மாற்றி விட்டது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தியர்களை கேலி, கிண்டல் செய்தவர்கள், தற்போது பணத்திற்காக, நம்மிடம் மண்டியிடும் போது, அதனை பார்க்க ஆச்சரியமாக உள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு, அவர்களின் உண்மையான நிறம் என்ன என்பது ஆரம்பத்திலே தெரிய வரும். இப்போது, அவர்கள் திடீரென தங்களது நிறங்களை மாற்றியுள்ளனர்' என ஃபரூக் என்ஜினியர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்