VIDEO: சத்தமே இல்லாமல் ‘ஸ்மித்’ பார்த்த வேலை.. காட்டிக்கொடுத்த ஸ்டம்ப் ‘கேமரா’.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. ‘தீயாய்’ பரவும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது காலால் கிரீஸில் ஏதோ செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 407 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இன்றைய போட்டியில் இந்தியா 334 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 97 ரன்களும், புஜாரா 77 ரன்களும், ரோஹித் ஷர்மா 52 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் போட்டியின் இடையே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங் செய்யும் போது முதல் இரண்டு ஸ்டம்ப்களை மறைக்கும் வகையில் நிற்பார்கள். ஒரு சில பேட்ஸ்மேன்கள் ஒரு ஸ்டம்பை மறைத்து கூட ஆடுவார்கள். இதற்காக பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிற்கு முன் தங்கள் காலால் கோடு போட்டு குறித்து கொள்வர். இது ‘கார்டு மார்க்’ (Guard marks) என்று அழைக்கப்படுகிறது. இந்த கார்டு மார்க் மூலமாகதான் பந்து எந்த லைனில் வருகிறது என்பதை கணித்து பேட்ஸ்மேன்கள் விளையாடுவார்கள். குறிப்பாக எல்பிடபிள்யூ அவுட்டை தவிர்க்க இந்த கார்டு மார்க்தான் உதவும்.

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் கார்டு மார்க் ஒன்று போட்டு வைத்திருந்திருந்தார். அப்போது வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்,  ரிஷப் பந்துக்கு தெரியாமல் அவர் போட்டிருந்த கார்டு மார்க்கை அழித்து விட்டு, அதற்கு அருகில் வேறொரு மார்க்கை தனது காலால் போட்டுவிட்டு சென்றார். ஸ்மித்தின் இந்த செயல் ஸ்டம்ப் கேமராவில் அப்படியே பதிவானது. ஆனால் இதை கண்டுபிடித்த ரிஷப் பந்த் மீண்டும் புதிய கார்டு மார்க்கை போட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் ரிஷப் பந்தை குழப்பும் வகையில் ஈடுபட்ட ஸ்மித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு உப்புத்தாள் வைத்து பந்தை தேய்த்த விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்