கிடைச்ச ‘வாய்ப்பை’ இப்படி கோட்டை விட்டீங்களே.. ‘இனிமேல் டீம்ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம் வீரரை சரமாரியாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் இளம் வீரர் ஒருவர் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. முன்னதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், மனிஷ் பாண்டே, தீபக் சஹார் உள்ளிட்ட 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்காரணமாக ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தவ் படிக்கல், சந்தீப் வாரியர் உள்ளிட்ட அறிமுக வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர் 23 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். குறிப்பாக கேப்டன் ஷிகர் தவான், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி, 14.3 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இலங்கை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தனஞ்சய டி சில்வா 23 ரன்கள் எடுத்தார். இந்திய அணியைப் பொறுத்தவரை ராகுல் சஹார் மட்டுமே 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 46 ரன்கள் அடித்திருந்தார். இதனை அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோசமான ஆட்டத்தையே சஞ்சு சாம்சன் வெளிப்படுத்தினார்.

குறிப்பாக நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகிக் கொண்டிருந்தனர். அப்போது களமிறங்கிய சஞ்சு சாம்சன், 3 பந்தை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். முன்னதாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பி வந்தார். அதனால் நீண்ட காலமாக அவர் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டு இருந்தார்.

இதனை அடுத்து ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டத்தால் அதிருப்தி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்