‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் ரசிகர்கள்’!.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்.. கோலிக்கு அடுத்த நெருக்கடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்து அணி வெற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் நியூஸிலாந்து அணி கோப்பையை வெல்வது இதுதான் முதல்முறை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில் சமூக வலைதளங்களில் இந்திய அணியை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, 5-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்தது. இதனிடையே அணி வீரர்களுடன் நடந்த மீட்டிங்கில், கடைசி நாளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த வேண்டும் என கேப்டன் கோலி கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு துணைக் கேப்டன் ரஹானேவும், ரோஹித் ஷர்மாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர். நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி, முதலில் போட்டியை டிரா செய்ய முயற்சிப்போம் என ஆலோசனை கூறியுள்ளனர். ஆனால் கோலி இதனை ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி கடைசி நாளான நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் கோலி 13 ரன்களில் அவுட்டாக, அவரைத் தொடர்ந்து புஜாராவும் 15 ரன்களில் அவுட்டாகினார். இதில் ரிஷப் பந்த் மட்டுமே 41 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 170 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் நியூஸிலாந்து அணிக்கு வெற்றிக்கான இலக்கு எளிதாகிவிட்டது. ஏற்கனவே அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 32 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்கள் அடித்து நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில், இதுவரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது. தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.

இதனால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் ‘Captaincy’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்