‘தோத்தாலும் சண்டை போட்டு தோக்கணும்’!.. அதுக்கு உதாரணம் டெல்லி அணிதான்.. இந்த சம்பவத்துக்கு அப்புறம் KKR கதிகலங்கி போய்ட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

ஐபிஎல் (IPL) தொடரின் ப்ளே ஆஃப் (PlayOffs) போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் மற்று சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு குறைந்த இலக்கே நிர்ணயிக்கப்பட்டதால், ரன்கள் அதிகம் செல்லாமல் டெல்லி அணி கட்டுப்படுத்த முயன்றது.

ஆனால் வெங்கடேஷ் ஐயர் அடிக்கடி சிக்சர், பவுண்டரிகளை விளாசி டெல்லி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். சுப்மன் கில்லும் தன் பங்கிற்கு பவுண்டரி, சிக்சர் விளாசினார். அதனால் 11 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்களை கொல்கத்தா அணி எடுத்தது. அதனால் கிட்டத்தட்ட தோல்வி பெறும் நிலைக்கு டெல்லி அணி சென்றது.

அப்போது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், அணி வீரர்கள் அனைவரையும் அழைத்து சில அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவிடம் நீண்ட நேரம் பேசினார். இதனை அடுத்து 12-வது ஓவரை ரபாடா வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயர் பவுண்டரி விளாசினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெங்கடேஷ் ஐயர் (55 ரன்கள்) வெளியேறினார். இதுதான் ஆட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா (13 ரன்கள்), அன்ரிச் நார்ட்ஜே வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ஆவேஷ் கான் வீசிய 17-வது ஓவரில் சுப்மன் கில் (46 ரன்கள்), ரபாடா வீசிய 18-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் (0), அன்ரிச் நார்ட்ஜே வீசிய 19-வது ஓவரில் கேப்டன் இயான் மோர்கன் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தின் முதல் பாதி வரை விக்கெட் இழப்பின்றி விளையாடி வந்த கொல்கத்தா அணி, இரண்டாம் பாதியில் அப்படியே தலைகீழாக மாறியது. இதனால் கடைசி 6 பந்தில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலைக்கு கொல்கத்தா அணி வந்தது. சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த கொல்கத்தா அணிக்கு இது அதிர்ச்சியாக அமைந்தது.

அப்போது கடைசி ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் முதல் 1 ரன் மட்டுமே செல்ல, அடுத்த பந்தில் ரன் ஏதும் செல்லவில்லை. இதனை அடுத்து 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் எல்பிடபுள்யூ ஆகி அவுட்டானார். அடுத்து வந்த சுனில் நரேன், தான் எதிர்கொண்ட முதல் பந்தே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனால் 2 பந்துகளில் 6 ரன்கள் அடித்தால் என்ற பரபரப்பான கட்டத்துக்கு கொல்கத்தா அணி சென்றது. அப்போது 5-வது பந்தை எதிர்கொண்ட ராகுல் திரிபாதி சிக்சர் விளாசினார். இதனால் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது.

இப்போட்டியில் தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய டெல்லி அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றில் 150 கீழ் ரன்கள் எடுத்த போட்டிகளில் டெல்லி அணி வென்றதில்லை. இதுவரை 25 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்து 150 ரன்களுக்கு குறைவாக டெல்லி அணி எடுத்துள்ளது. அப்போட்டிகளில் சேசிங் செய்தபோது ஒன்றில் கூட டெல்லி அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்