"இதுவரை டெஸ்ட் 'கிரிக்கெட்'ல இப்டி ஒரு சம்பவம் நடந்ததேயில்ல... கொஞ்சம் கூட நம்ப முடியலடா சாமி..." 'இங்கிலாந்து' அணி செய்து காட்டிய 'அரிய' சாதனை!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டையும் இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றியது.

இதில், இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 381 ரன்களும், இங்கிலாந்து அணி 344 ரன்களும் எடுத்தது. அதன்பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அதன் பின்னர், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை எட்டி, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை சொந்தமாக்கியது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், முதல் இன்னிங்ஸில் 186 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் நிகழ்த்தாத அரிய சாதனை ஒன்றை இங்கிலாந்து அணி நிகழ்த்திக் காட்டியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய போது, இலங்கை அணியின் பத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளும், மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், சாம் குர்ரன் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனர்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில், இலங்கை அணியின் பத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே எடுத்தனர். டாம் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதுவரை நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இப்படி நிகழ்ந்ததில்லை.

 

ஒரு இன்னிங்ஸ் முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களும், அடுத்த இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர்களும் என விக்கெட்டை கைப்பற்றியுள்ளது இதுவே முதல்முறை. இப்படி ஒரு புதுவிதமான சாதனையை செய்து காட்டிய இங்கிலாந்து அணிக்கு பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்