"அவ்ளோ தான்... எல்லாமே போச்சுனு நெனச்சேன்"!.. மிஸ்ஸான ரிஷப் பண்ட்-இன் கேட்ச்!.. நொறுங்கிப் போன டிம் சவுத்தி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட்-இன் கேட்ச்சை தவறவிட்டது குறித்து டிம் சவுத்தி மனம் திறந்துள்ளார்.

முதல் முறையாக நடத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தது. இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த இத்தொடரின் இறுதிப் போட்டியானது இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அனுபவம் குறித்து நியூசிலாந்து பந்துவீச்சாளர் டிம் சவுத்தி, ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார், அதில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்-இன் கேட்சை தவறவிட்ட போது உலக கோப்பையையே தவறவிட்டது போல உணர்ந்தேன் என கூறியுள்ளார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியின் போது ரிசர்வ் நாளின் முதல் செஷனில், இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 5 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, கெயில் ஜேமிசன் பந்து வீச்சில் கொடுத்த மிக எளிய கேட்ச்சை, இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற டிம் சவுத்தி கோட்டை விட்டார். இந்தியா அப்போது 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. மிடில் ஆர்டரில் ரகானேவும், ரிஷப் பண்ட்-ம் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக் கூடிய திறன் படைத்த ரிஷ்ப் பண்ட்-இன் கேட்ச்சை வீணடித்தது நியூசிலாந்தின் கோப்பை கனவுக்கே பாதகமாக மாறியிருக்கக்கூடும்.

ரிஷப் பண்ட்-இன் கேட்ச்சை வீணடித்து அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பை கொடுத்த போது பட்டத்தை கைவிட்டதாக நினைத்தீர்களா என டிம் சவுத்தியிடம் கேட்டதற்கு, "பண்ட் விளையாடும் விதத்தை பார்த்த பின்னர், ரிஷப் பண்ட்-இன் கேட்சை தவறவிட்ட பிறகு நான் அமைதியாக இருந்ததாக கூறினால் அது பொய் கூறுவதாகும்.

அவரின் கேட்ச்சை கோட்டைவிட்ட பின்னர் என் மூளைக்குள் சாத்தான்கள் உலாவிக்கொண்டிருந்தன. ஆனால், அடுத்த ஓவரில் பந்துவீச வந்தபோது நான் விரைவாகவே அதில் இருந்து மீண்டாக வேண்டியதிருந்தது.

5, 6 ஓவர்களில், பண்ட் மேட்சை நம் பக்கம் இருந்து திசை திருப்பிவிடக்கூடியவர். ஆனால் அவர் அவுட் ஆன பிறகு தான் நிம்மதியடைந்தேன். ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் டாப் எட்ஜ் ஆகி 41 ரன்களுக்கு ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார்.

அது ஒரு பயங்கரமான உணர்வு. நீங்கள் ஒரு கேட்சை தவறவிடும்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிக மோசமான உணர்வு, நீங்கள் உங்கள் சக வீரர்களை கைவிடுவது போல உணர்வீர்கள்" என்றார் டிம் சவுத்தி.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019-ல் உலக சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கும் போது நீங்கள் சாம்பியன் ஆவீர்கள் என நினைத்தீர்களா என கேட்டதற்கு, "நிச்சயமாக இல்லை, அப்போது தான் இலங்கை அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவினோம். அதன் பிறகு நல்ல கிரிக்கெட் விளையாடுனோம். கொஞ்சம் அதிர்ஷ்டமும் எங்களுக்கு இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்