‘எனக்கு ரொம்ப வருத்தம்’!.. அவருக்கு ஏன் ‘கேப்டன்’ பொறுப்பு கொடுக்கல..? புது குண்டை தூக்கிப்போட்ட பயிற்சியாளர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் ஆக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கிடையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய ஏ அணி விளையாட உள்ளது. இதற்கு கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக அவரது சிறுவயது பயிற்சியாளர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து CricketNext இணையதளத்துக்கு பேட்டியளித்த அவர், ‘ஹர்திக் பாண்ட்யாவால் கிரிக்கெட்டில் அனைத்து வகையான பங்களிப்பையும் செய்ய முடியும். கிரிக்கெட்டின் நுட்பமும், பொறுமையும், முதிர்ந்த குணமும் அவருக்கு இருக்கிறது. வாய்ப்பு வழங்கப்பட்டபோதெல்லாம் அவர் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை மைதானத்தின் தன்மை, சீதோஷனம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. அவரிடம் அனைத்து சூழல்களையும் கையாளும் திறன் இருக்கிறது’ என ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘ஹர்திக் பாண்ட்யாவால் இன்னும் 7 ஆண்டுகள் வரைக்கும் கூட இந்திய அணிக்காக விளையாட முடியும். அதற்கான திறமைகள் அவரிடம் நிறைய இருக்கிறது. இலங்கை தொடரில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கி இருக்கலாம். ஆனால் அவருக்கு கொடுக்காதது எனக்கு வருத்தம்தான். இந்திய அணிக்காக மூன்று பார்மெட்களிலும் அவர் விளையாடி இருக்கிறார். அதனால் அவர் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஹர்திக் பாண்ட்யா சிறுவயதில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் என்னுடன் மரியாதையுடன் பழகி வருகிறார். அவர் நல்ல மனிதர். ஒரு ஆல்ரவுண்டராக இந்தியாவுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும். தற்போது பவுலிங் செய்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்’ என ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் இலங்கை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யாவின் உடற்தகுதி குறித்து பகிர்ந்திருந்தார். அதில், ‘ஆஸ்திரேலியா மற்றும் ஐபிஎல் தொடர்களில் பாண்ட்யா பந்துவீச்சில் ஈடுபடவில்லை. ஆனால் இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக பந்துவீசினார். தற்போது இண்ட்ரா ஸ்குவாட் போட்டியிலும் மிகச்சிறப்பாகவே பந்து வீசியுள்ளார். என்னைப் பொறுத்தவரை அவரிடம் நல்ல நம்பிக்கை தெரிகிறது’ என சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்