‘லேசாக சிணுங்கும் மழை’!.. கிரவுண்டை போட்டோ எடுத்து ‘இன்ஸ்டா’ ஸ்டோரி போட்ட DK.. கேப்ஷன் என்ன தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் என்ற நிலையில், நேற்றைய 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆனால் போட்டி தொடங்கிய 3-வது ஓவரிலேயே கேப்டன் விராட் கோலி (44 ரன்கள்) அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனைத் தொடர்ந்து 49 ரன்கள் எடுத்திருந்தபோது நீல் வாக்னர் ஓவரில் துணைக் கேப்டன் ரஹானேவும் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய வீரர்களில் அஸ்வின் மட்டுமே 22 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக, 217 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கெயில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் மற்றும் நீல் வாக்னர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் டாம் லாதம், டெவன் கான்வே களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் டாம் லாதம் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டெவன் கான்வே 54 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை அடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தனர். ஆனால் போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்னதாகவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் 4-ம் நாளான இன்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த நிலையில் போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டனில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் போட்டியின்போது அவ்வப்போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இங்கிலாந்தில் வானிலை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் மழை இடையூறு இல்லாமல் போட்டி நடக்க 67 சதவிதம் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு வர்ணனையாளராக சென்றிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சவுத்தாம்ப்டன் வானிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். அதில், மேகமூட்டத்தோடு லேசான தூரலுடன் காணப்படும் மைதானத்தின் போட்டோவை பதிவிட்டு, ‘இது இப்போது அழகாக தெரியவில்லை’ என தினேஷ் கார்த்திக் கேப்ஷன் போட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்