‘தோனியின் பெயரில் வைரலான பேஸ்புக் பதிவு’... ‘உண்மை என்ன’?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

‘சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’ என்று தோனி கூறியிருப்பதாக வெளியான பேஸ்புக் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்தப் பதிவு உண்மையானது அல்ல என்று தெரியவந்துள்ளது.

உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் மூத்த வீரர் தோனி ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், ஓய்வு குறித்து தோனி, இதுவரை எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ள தோனி, அடுத்த 2 மாதங்கள் ராணுவத்தினருடன் இணைந்து, தனது நேரத்தை செலவிட இருப்பதாக கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பெயரில் இருக்கும் பேஸ்புக் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘உலக கோப்பை அரையிறுதியில் தோற்றதால் நீங்கள் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பதை அறிவேன். எனது ஓய்வு பற்றி அதிகமாக பேசப் படுகிறது. அணியை விட்டு விலக இது உகந்த நேரமல்ல. ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவேன். தொடர்ந்து ஆதரவளிங்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

தோனியே எழுதியிருப்பது போல இருக்கும் இந்தப் பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை உண்மை என்றே பலரும் நிம்பிய நிலையில்,  அது தோனி ரசிகர்கள் போலியாக உருவாக்கிய பதிவு என்றும், அது உண்மை யானது அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்