அடுத்த ஐபிஎல் சீசன்ல ‘கேப்டன்சி’ கை மாறுதா? இது என்னடா புது ‘ட்விஸ்ட்’.. குண்டை தூக்கிப்போட்ட முன்னாள் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விலகிவிடுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக தோனி இருந்து வருகிறார். இவர் தலைமையிலான சென்னை அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 6 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு பெரும் சோதனை காலமாக அமைந்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தோனியிடமே வர்ணனையாளர் கேட்டபோது நிச்சயமாக இல்லை, அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாடுவேன் என்று தோனி தெரிவித்தார்.

இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் 14-வது ஐபிஎல் சீசனில், சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை டுபிளிசிஸிடம் தோனி ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘எனக்குக் கிடைத்த தகவல்களின்படி 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிவிடலாம். அந்தப் பொறுப்பை டுபிளிசிஸிடம் தோனி ஒப்படைப்பார் என தெரிகிறது. தோனி அணியில் சாதாரண வீரராக, விக்கெட் கீப்பராக இருந்து செயல்படுவார். கேப்டன் பொறுப்பில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே தோனி இதை செய்யலாம்.

இப்போதுள்ள சூழ்நிலையில் சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு மாற்றத்துக்கு வேறு வீரர் யாருமில்லை. சிஎஸ்கே அணியைத் தவிர்த்து மற்ற அணியைப் பார்த்தால், ஏலத்தில் எந்த முக்கிய வீரரையும் அணிகள் இழக்கத் தயாராக இல்லை. கேப்டன் தகுதியுள்ள எந்த வீரரையும் மற்ற அணிகள் விடுவிக்கத் தயாராக இல்லை. அதனால் டுபிளிசிஸிடம் கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைக்கலாம்.

எனக்குத் தெரிந்தவரை 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றபின், கேப்டன் பொறுப்பை வேறு வீரரிடம் தோனி ஒப்படைக்க எண்ணினார். அது தொடர்பாக அவர் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசினார். ஆனால், அந்த நேரத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்கள் இருந்தது. அப்போது அணியை வழிநடத்த தகுதியான வீரர்கள் இல்லாத காரணத்தினால் கேப்டன் பதவியில் தோனி தொடர்ந்து நீடித்தார்’ என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்