VIDEO: ‘மனசுல இருந்த சோகம்’!.. கையெடுத்து கும்பிட்டு கலங்கிய ‘சஹால்’ மனைவி.. வெளியான ‘உருக்கமான’ பின்னணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வீரர் சஹாலின் மனைவி உணர்ச்சிவசப்பாட்டார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 10-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 204 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களும் (3 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்), டி வில்லியர்ஸ் 76 ரன்களும் 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகள்) அடித்து அசத்தினர். அதேபோல் கொல்கத்தா அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 205 அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிதிஷ் ரானா மற்றும் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 23 ரன்கள் எடுத்திருந்தபோது கைல் ஜேமிஸ்சன் ஓவரில் சுப்மன் கில் அவுட்டாகினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திருப்பதி 25 ரன்களிலும், கேப்டன் இயான் மோர்கன் 29 ரன்களிலும் அவுட்டாகினார். இதனிடையே நிதிஷ் ரானா 18 ரன்களில் அவுட்டாகி வெளியேற, கொல்கத்தா அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்தி 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் (26 ரன்கள்) மற்றும் ஆண்ட்ரே ரசல் (31 ரன்கள்) கூட்டணி ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தியது. இவர்கள் இருவரும் அவுட்டானதும், அடுத்து வந்த வீரர்கள் ரன் எடுக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே கொல்கத்தா அணி எடுத்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் தொடரின் விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர் வெற்றி பெற்று பெங்களூரு அணி அசத்தியுள்ளது.

இப்போட்டியில் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வெர்மா உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அதற்கு காரணம், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பம் சஹாலுக்கு சிறப்பானதாக அமையவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த, மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் சஹால் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. மேலும் அவரது ஓவரில் ரன்களும் சற்று அதிகமாக சென்றன.

இந்த நிலையில் நேற்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நிதிஷ் ரானாவின் விக்கெட்டை வீழ்த்தி, சஹால் தனது கணக்கை தொடங்கினார். அப்போது கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சஹாலின் மனைவி தனஸ்ரீ வெர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி, கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய சஹால் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை ( நிதிஷ் ரானா, தினேஷ் கார்த்திக்) வீழ்த்தினார். முதல் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே சஹால் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் அவரது கடைசி ஓவரை கொல்கத்தா வீரர் ஆண்ட்ரே ரசல், 1 சிக்சர், 3 பவுண்டரிகள் விளாசினார். அதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் சஹால் 20 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய சஹால், ‘இது ஒரு அற்புதமான உணர்வு. நீங்கள் பவுலிங் சிறப்பாக வீசியும், விக்கெட் எடுக்காமல் இருந்தால் வேதனையாக இருக்கும். முதல் விக்கெட்டை எடுத்ததும், கொஞ்சம் நான் உணர்ச்சிவசப்பட்டேன். நான் ரசலை அவுட்டாக்க நினைத்து, கொஞ்சம் அகலமாக பந்து வீச விரும்பினேன், ஏனென்றால் இடது பக்கம் பவுண்டரி லைன் சிறியது. அதனால் அடுத்த 3 பந்துகளில் பீல்டிங்கை மாற்றி நிற்க வைத்தேன்’ என சஹால் பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்