"என்னோட 'ரோல்' மாடல்'னா அது அவரு தான்.. அவரோட 'பேட்டிங்' பாத்து தான் வளர்ந்தேன்.." 'தேவ்தத் படிக்கல்' பகிர்ந்த 'சேதி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணியின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில், மும்பை அணி இதுவரை 5 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் கோலி தலைமையிலான பெங்களூர் அணி, பல நல்ல வீரர்கள் அணியில் இருந்த போதும் தொடர்ந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டு வருகிறது.

இதனால், இந்த முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக அறிமுகமான இளம் வீரர் தேவ்தத் படிக்கல், தொடக்க வீரராக களமிறங்கி யாரும் எதிர்பாராத வகையில் ஆடி அசத்தியிருந்தார். இதனால், இந்த சீசனில் அவர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தன்னுடைய ரோல் மாடல் யார் என்பது பற்றி தேவ்தத் படிக்கல் கருத்து தெரிவித்துள்ளார்.

'நான் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு இவரால் அதிகம் ஈர்க்கப்பட்டேன் என்று கூறிவிட முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதிலும்  குறிப்பாக, இந்திய அணிக்காக ஆடும் வீரர்களிடம் இருந்து நான் அதிகம் கற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், அப்படி ஒரு இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்பது அத்தனை சாதாரண காரியமல்ல.

ஆனால், எனது ரோல் மாடல் யார் என்றால் அது கம்பீர் தான். சிறு வயது முதலே அவரது பேட்டிங்கை பார்த்து வளர்ந்துள்ளேன். நான் இப்போதும் அவரது கிரிக்கெட் வீடியோக்களைக் கண்டு ரசிக்கிறேன். அதே போல, அவரது பேட்டிங்கை தற்போது வரை நான் விரும்புகிறேன்' என தேவ்தத் படிக்கல் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தேவ்தத் படிக்கல், இன்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்