எப்படி இருக்க வேண்டிய மனுசன்.. கடைசியில எங்க உட்கார்ந்திருக்காரு பாருங்க.. ரசிகர்களை ‘சோகத்தில்’ ஆழ்த்திய போட்டோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சோகமாக அமர்ந்திருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துபாய் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் (IPL) தொடரின் 49-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்களும், அப்துல் சமத் 25 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 119 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 57 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (David Warner) ரசிகர்களுடன் கேலரியில் அமர்ந்து நேற்று போட்டியை பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் இந்தியாவில் நடைபெற்ற முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்விகளை அந்த அணி சந்தித்தது.

இதன்காரணமாக, டேவிட் வார்னரை ஹைதராபாத் அணி நிர்வாகம் கேப்டன் பதவியில் இருந்து விலக்கியது. இதனை அடுத்து கேன் வில்லியம்சன் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அணியிலும் டேவிட் வார்னருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் விளையாடினார். ஆனால் அப்போட்டியில் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் அடுத்த போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ஜேசன் ராய் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

இதனிடையே ரசிகர் ஒருவர் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வார்னர், இனி ஆரஞ்சு ஜெர்சியில் என்னைப் பார்ப்பது சற்று கடினம்தான் என பதிலளித்திருந்தார். அதேபோல் அடுத்த நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியின்போது மைதானத்துக்கே வார்னர் வரவில்லை.

இந்த நிலையில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது டக் அவுட்டில் சக வீரர்களுடன் அமராமல், கேலரியில் ரசிகர்களுடன் அமர்ந்து சோகமாக போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். டேவிட் வார்னரின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உருக வைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி, 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்