"'கோலி', 'ரோஹித்'த எல்லாம் உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது.. சும்மா பேசணுமேன்னு பேசாதீங்க.." 'அமீரை' தாறுமாறாக கிழித்த 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் (Mohammad Amir), தனது 29 ஆவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தது, கடும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள முன்னாள் வீரர்கள் சிலர், மனரீதியாக தன்னை அதிகம் துன்புறுத்தியதாகவும், இதனால் தான் நான் ஓய்வு முடிவை எடுத்தேன் என்றும், அமீர் தனது ஓய்வுக்கான காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், சமீபத்தில், தான் பந்து வீசிய பேட்ஸ்மேன்கள் பற்றி பேசிய முகமது அமீர், இந்திய பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் ரோஹித் ஆகியோருக்கு தன்னால் எளிதாக பந்து வீச முடியும் என்றும், அதிலும் ரோஹித்தை எளிதில் அவுட் எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் குறித்து அமீர் தெரிவித்துள்ள கருத்தால் கொதித்து போயுள்ளார், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனேரியா (Danish Kaneria). இதுபற்றி பேசிய கனேரியா, 'அமீர், நீங்கள் தலைப்பு செய்திகளில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. நீங்கள் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான பந்து வீச்சாளராகவும் செயல்பட்டுள்ளீர்கள். நீங்கள் கிரிக்கெட்டில் அறிமுகமான போது, உங்களுக்கான இடத்தை உருவாக்கவும் செய்தீர்கள்.

நீங்கள் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டையும் சிறப்பாக வீசக் கூடியவர். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் பலரையும் உங்களது பந்து வீச்சால் திணறடித்துளீர்கள். சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி, அதிர்ச்சி அளித்தீர்கள்.

ஆனால், அமீர் தற்போது  சம்மந்தமே இல்லாமல், இந்திய வீரர்கள் பற்றி பேட்டி கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது. ஐசிசி தொடர்களுக்கு எதிராக மட்டுமே அமீர் இந்திய வீரர்களுக்கு பந்து வீசியுள்ளார். அதுவும், கோலிக்கும்,ரோஹித்திற்கும் எத்தனை பந்துகளை அமீர் வீசியிருப்பார்?. அப்படி இருக்கையில், உலகத்தரம் வாய்ந்த இரு வீரர்கள், எனது பந்தை அடித்து ஆட முடியாது என அமீர் எப்படிக் கூற முடியும்?. ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அது சரி தானா என யோசித்து பேச வேண்டும்.

பும்ரா இந்திய அணிக்காக அறிமுகமான போது, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் அவரை விமர்சனம் செய்திருந்தார். ஆனால், தற்போது பும்ரா கிரிக்கெட் உலக அரங்கில் மிகச் சிறந்த பவுலர். அதே போல, ரோஹித் உங்களை விட மிகவும் உயர்ந்தவர். இதனால், யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது' என இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்த அமீரின் கருத்திற்கு கனேரியா பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்