இந்த ‘ஒரு’ சம்பவத்தை என்னைக்கும் ‘மறக்கவே’ மாட்டோம்.. ‘மிஸ் யூ வாட்சன்’.. உருகும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வாட்சன் 2008 முதல் ஐபிஎல் தொடரில் முக்கிய வீரராக வலம் வந்தார். கடந்த 2008 ஐபிஎல் ராஜஸ்தான் அணி கோப்பையை வென்றதில் வாட்சனுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவர் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளில் ஆடியுள்ளார். ஆனாலும் சிஎஸ்கே அணியுடன் மட்டும் அவருக்கு அதிக பிணைப்பு இருந்தது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் அவர் சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது எப்போதும் தனி அன்பு வைத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதமடித்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வாட்சன் சரியாக ரன் குவிக்கவில்லை. சற்று தடுமாறியே வந்தார். அதேபோல் சென்னை அணியும் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போது வாட்சனின் இடத்தை இளம்வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே ஆடி வந்த வாட்சன், இனி அவற்றில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவை சிஎஸ்கே வீரர்களிடம் அவர் ஏற்கனவே கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த செய்தி வெளியானது முதல் சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் சோகத்துக்கு உள்ளாகினர்.

இதனால் வாட்சனுக்கு நன்றி கூறும் வகையில் ‘ThankYouWatson’ என்ற ஹேஷ்டேக்கை  சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் வாட்சனின் சாதனையை பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் வாட்சன் காலில் காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையிலும், அதை பொருட்படுத்தாமல் ஆடியதை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகள் மிகவும் உருக்கமாக உள்ளன.

கடந்த 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சென்னை விளையாடியது. அப்போட்டியில் சென்னை வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வந்தனர். இதனால் சென்னை அணி மோசமான தோல்வியை சந்திக்கப்போகிறது என ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். அப்போது களத்தில் நின்ற வாட்சன், காலில் அடிபட்டு ரத்தம் வழிந்த நிலையிலும் தனி ஒருவனாக மும்பை பந்து வீச்சை சிதறடித்தார். அவரது அதிரடியை பார்த்த பின்னர்தான் ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது. ஆனால் அப்போட்டியில் 1 வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றியை தவறவிட்டது.

சென்னை அணிக்காக வாட்சன் விளையாடிய விதம் சிஎஸ்கே ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து அணி ரசிகர்களையும் உருக வைத்தது. அப்போது சிஎஸ்கே பணியாளர் ஒருவர் வாட்சனை உருக்கமாக கட்டியணைத்த சம்பவம் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்தது.

இந்த வீடியோவை தற்போது இணையத்தில் பதிவிட்டு வாட்சனுக்கு ரசிகர்கள் தங்களது அன்பையும், நன்றியை தெரிவித்து வருகின்றனர். வாட்சனின் அர்ப்பணிப்பை பாராட்டி ரசிகர்கள் பதிவிட்ட இந்த வீடியோ அனைவரையும் உருக வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட சிஎஸ்கே ரசிகர்கள் வாட்சனின் மீது வைத்திருக்கும் அன்பு அதிகம் என்று சொன்னாலும் மிகையாகது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்