‘போன வருசம் நடந்த சர்ச்சை’!.. எல்லாத்துக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்ச சிஎஸ்கே சிஇஓ.. ரசிகர்களை உருக வைத்த ‘அந்த’ வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரெய்னா குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடர் இன்று (09.04.2021) முதல் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. இதற்கு அடுத்த நாள் (ஏப்ரல் 10-ம் தேதி) மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக மும்பை சென்றுள்ள சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் The Indian Express ஊடகத்துக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பியது அணியில் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘நிச்சயமாக இல்லை. சிஎஸ்கே ஒரு குடும்பம்’ என காசி விஸ்வநாதன் பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய காசி விஸ்வநாதன், ‘சிஎஸ்கே அணியில் விளையாட ரெய்னா ஆர்வமாக இருக்கிறார். சையது முஷ்டாக் அலி தொடரில் நன்றாக ஆடியுள்ளார். விஜய் ஹசாரே போட்டி 50 ஓவர் தொடர் என்பதால் அவர் ஆடவில்லை. தற்போது ரெய்னா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நன்றாக ஆட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது. ரெய்னா திறமையானவர். சிஎஸ்கே அணிக்காக அவர் நிறை செய்துள்ளார். கடந்த 10-12 வருடங்களாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் இவர்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என ரெய்னாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அந்த தொடரின் ஆரம்பத்தில் ரெய்னா உறவினர்கள் சிலர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் அந்த ஐபிஎல் தொடரில் விளையாடாமல் ரெய்னா இந்தியா திரும்பினார். மேலும் ஹோட்டலில் அறை ஒதுக்கியது தொடர்பாக சிஎஸ்கே அணியுடன் ரெய்னாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

அதனால் சென்னை அணிக்கு ரெய்னா மீண்டும் திரும்புவரா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிஎஸ்கே வீரர்களுடன் தற்போது ரெய்னா பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும் சிஎஸ்கே அணியுடன் ரெய்னாவுக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை என்பது சிஇஓ காசி விஸ்வநாதன் அளித்த பதிலால் உறுதியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்