‘போட்றா வெடிய’!.. சிஎஸ்கே சிஇஓ சொன்ன அந்த வார்த்தை.. இதுதான் ‘தல’-க்கு சரியான பிறந்தநாள் பரிசு.. ‘செம’ குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ சொன்ன பதிலால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை அந்த அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, அதில் 110 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். மேலும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையையையும் வென்று கொடுத்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதே ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் முதல்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறியது.

இதனிடையே தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. அப்போது சென்னை அணி விளையாடிய கடைசி போட்டியின் போது தொகுப்பாளர் தோனியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு, ‘Definitely Not’ என தோனி பதிலளித்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது.

இதனை அடுத்து இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும், இந்த ஆண்டுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவின. இந்த சூழலில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘சிஎஸ்கே அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இதுவரை அணிக்காக அவர் செய்து வரும் அனைத்து விஷயங்களும் எங்களுக்கு மன நிறைவை கொடுத்துள்ளது’ என காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.

சிஎஸ்கே சிஇஓ-ன் இந்த பதில் இணையத்தில் வைரலான நிலையில், இதுதான் தோனிக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தோனி, நேற்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்