‘தோனி, கங்குலியின் கலவை தான் இவரு’... ‘அந்த ரெண்டு கேப்டன்களின் திறமையும்’... ‘அப்டியே இவர்கிட்ட இருக்கு’... ‘புகழ்ந்து தள்ளிய முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் கேப்டன்களான தோனியும், சவுரவ் கங்குலியின் கலவை தான், தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா என்று, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல் போட்டியில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில், அதாவது 2008 முதல் 2011 வரை மும்பை அணி ஒரு கோப்பையும் வெல்லவில்லை.

ஆனால் மும்பை அணியில் ரோகித் சர்மா வருகைக்குப் பிறகு அந்த அணியின் அடையாளமே மாறி விட்டது. 2013 இல் ஆரம்பித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று தந்த பிறகு ரோகித் சர்மாவின் தைரியமான கேப்டன்ஷிப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையடுத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர், மைக்கேல் வாகன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான இர்பான் பதான் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘இந்திய கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன்களில் இருவரான தோனி மற்றும் சவுரவ் கங்குலியின் கலவைதான் ரோகித். கங்குலி தனது பந்து வீச்சாளர்களை நம்பி அதன் வழியாக சென்றார். தோனி தனது பந்துவீச்சாளர்களை நம்பினார். ஆனாலும் எப்போதும் ஒரு உள்ளுணர்வுடன் முடிவுகளை எடுத்தார்.

இதேபோல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா யாதவை பயன்படுத்திய விதம் அவரது கேப்டன்ஷிப்பை காட்டியது. அவர் தனது உள்ளுணர்வைப் பயன்படுத்தினார். அவரது சிந்தனை எவ்வளவு தெளிவாக இருந்தது என்பதை இது காட்டுகிறது. அவர் ஒரு பந்து வீச்சாளர்களின் கேப்டன் என்பதை இது உணர்த்துகிறது’  என்று இர்பான் பதான் கூறினார். முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கங்குலியின் தலைமையில் இர்பான் பதான் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்