"அது 'Teenage' வயசு'ல நடந்தது.. அதுக்கு போய் இப்படியா??.." 'இங்கிலாந்து' பிரதமர் சொன்ன கருத்து.. தீவிரமடையும் 'ராபின்சன்' விவகாரம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் பத்தாம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில், இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான இளம் வீரர் ஓல்லி ராபின்சன் (Ollie Robinson), மொத்தம் 7 விக்கெட்டுகளும், முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும் எடுத்து அசத்தியிருந்தார். தனது அறிமுக போட்டியிலேயே, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை அவர் ஈர்த்திருந்தாலும், 8 வருடங்களுக்கு முன் ராபின்சன் செய்திருந்த ட்வீட்கள் சில, தற்போது அவருக்கே சிக்கலாக வந்து சேர்ந்துள்ளது.

இனவெறி மற்றும் பாலியல் தொடர்பாக ராபின்சன் செய்திருந்த ட்வீட்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவரை தற்காலிகமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக விரைவில் விசாரணையும் நடத்தவுள்ளது. முன்னதாக, தனது கடந்த கால ட்வீட்களுக்கு, ராபின்சன் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இதனிடையே, ராபின்சனுக்கு ஆதரவாகவும் சில கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், ராபின்சனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். இது பற்றி, பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், 'பல வருடத்திற்கு முன்பு பதிவிட்ட ட்வீட். அதுவும், ஒரு டீன்ஏஜ் பருவத்தில் ராபின்சன் செய்திருந்த ட்வீட். தனது தவறுக்கு வயது முதிர்ந்த அந்த இளைஞர் மன்னிப்பும் கேட்டு விட்டார்.

அப்படி இருந்தும் அவர் மீது, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது மிகவும் அதிகபட்சமான ஒன்று' என தெரிவித்துள்ளார். பல இங்கிலாந்து முன்னாள் வீரர்கள், ராபின்சனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது அந்நாட்டின் பிரதமரே ராபின்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது, இந்த விஷயத்தை இன்னும் தீவிரமடையச் செய்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்