‘சொந்த மண்ணில் நான் விளையாடும் கடைசி போட்டி இதுதான்’!.. யாரும் இத எதிர்பார்க்கல.. ‘ஷாக்’ கொடுத்த சிஎஸ்கே வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதன் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து 3-வது டி20 போட்டியும் மழையால் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் திடீரென சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், ‘அணியின் முக்கிய வீரர் ஒருவரை வாழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் முன்கூட்டியே ஓய்வுபெற்றும் கூட, டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடி வந்தார். அவர் தற்போது டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவிக்கவுள்ளார். அவர் நம்முடைய நட்சத்திர வீரர் டுவைன் பிராவோதான். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் 4-வது டி20 போட்டிதான், அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் கடைசிப் போட்டி’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல் பிராவோ ஓய்வு குறித்து தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயான் பிஷப், ‘வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பிராவோ தனது கடைசி சர்வதேச டி20 போட்டியில் விளையாடுகிறார். டி20 கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான பிராவோவை கொண்டாட வேண்டும். நான் “கிரேட்” என்ற வார்த்தையை லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களிடம் பெரிய டெஸ்ட் போட்டி வீரர்கள் இருந்தார்கள், ஒருநாள் போட்டிக்கான மிகப்பெரிய வீரர்கள் இருந்தார்கள். அந்த வகையில் டி20 போட்டியில் மிகச்சிறந்தவர் பிராவோ என்பதில் சந்தேகமில்லை’ என அவர் வாழ்த்தியுள்ளார்.

இதனிடையே இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்றும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி டி20 தொடரை கைப்பற்றியது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட் பிராவோ விளையாட உள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால், அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக பிராவோ விளையாடி வருகிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளதால், ஐபிஎல் தொடரிலும் இருந்தும் பிராவோ ஓய்வு பெற உள்ளாரா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்