IPL 2022: "கடைசியா 2013-ல MI கிட்ட இப்படி தோத்தது".. 9 வருசம் கழிச்சு மோசமான தோல்வியை சந்தித்த CSK..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் 9 வருடங்களுக்கு பிறகும் சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கேப்டன் ஜடேஜா, ஆல்ரவுண்டர் பிராவோ, இளம் வீரர் முகேஷ் சௌவுத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இதில் 1 ரன்னில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மொயின் அலி டக் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த சமயத்தில் களமிறங்கிய அம்பட்டி ராயுடு, ராபின் உத்தப்பா உடன் கூட்டணி அமைத்து நிதானமாக விளையாடினார். அப்போது ராபின் உத்தப்பா 13 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ஜடேஜா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனை அடுத்து அம்பட்டி ராயுடுவும் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்த தோனி மற்றும் சிவம் துபே கூட்டணி நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் 57 ரன்கள் எடுத்திருந்த போதும் சிவம் துபே ஆட்டமிழக்க, அடுத்து வந்த பிராவோ தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து தோனியும் 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பிரிட்டோரியஸ் 8 ரன்னிலும், கிறிஸ் ஜோர்டன் 5 ரன்னிலும், முகேஷ் சௌத்ரி 12 ரன்களிலும் அவுட்டாகினர். அதனால் 18 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் சிஎஸ்கே அணி இழந்தது. இதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வி பெறுவது இது இரண்டாவது முறை. கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து 9 ஆண்டுகள் கழித்து தற்போது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் 3 போட்டிகளில் தொடர் தோல்வியை சென்னை அணி சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, IPL, CSKVPBKS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்