கிளம்பும் முன் வீரர்களுடன் மீட்டிங்..! இந்தியாவுக்கு எதிராக நீங்க இப்படிதான் விளையாடனும்’.. பாகிஸ்தான் பிரதமர் சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் கூறிய அறிவுரை குறித்து கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய (24.10.2021) போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன. துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ள இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு இரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளதால், எந்த அணி வெற்றி பெற உள்ளது என இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் பாகிஸ்தான் அணியும், தாங்கள் விளையாடிய 2 போட்டிகளில் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (Babar Azam), ‘இந்த தடவை நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. கடந்த காலத்தில் நடந்த விஷயங்கள் எங்களுக்கு முக்கியமில்லை. தற்போது எங்கள் அணியில் உள்ள பலத்தைக் கொண்டு நிச்சயம் அனைத்து அணிகளையும் எங்களால் எதிர்க்க முடியும் என்றே நினைக்கிறோம்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அணியை பதற்றமில்லாமல் வழி நடத்துவேன். இந்திய அணிக்கு எதிராக பொறுமையாக விளையாடினால் அழுத்தத்தை சரியாக கையாள முடியும். அப்படி ஆடினால் இந்தியாவை எளிதாக வீழ்த்த வாய்ப்பு உள்ளது. நாங்கள் 3-4 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் அதிகமாக விளையாடி இருக்கிறோம். அதனால் இந்த மைதானங்களை பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்’ என பாபர் அசாம் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிளம்பும் முன் பிரதமர் இம்ரான் கானுடன் (Imran Khan) மீட்டிங் நடந்தது. அப்போது 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு எதிராக பயமில்லாமலும், ஆக்ரோஷமாகவும் விளையாடுங்கள் எனக் கூறினார்’  என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. அதனால் உலகக்கோப்பையை வெல்லவதைக் காட்டிலும், இந்தியாவை வீழ்த்துவதற்குதான் பாகிஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. இதன் காரணமாகே இப்போட்டி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்