ஐபிஎல்-ல் ரசிகர்களுக்கு ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ காத்திருக்கு.. தீவிர பேச்சுவார்த்தையில் பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஐபிஎல் போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று இந்தியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடந்தபோது கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், ‘இந்திய கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் கூட்டத்தை விரும்புகிறது. ஆனால் வீரர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதால், இந்த முறை ரசிகர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு அனுமதி அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அது அந்நாட்டு அரசின் முடிவாக இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது’ என கூறியுள்ளார். இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்