'ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க’... ‘ஒருவழியாக ஓகே சொன்ன பிசிசிஐ’... ‘எப்போது முதல்’... ‘வெளியான அதிகாரப்பூர்வ தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை 2022 முதல் சேர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டியான ஐபிஎல் போட்டி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ தலைவரான சவுரவ் கங்குலி, அடுத்த ஆண்டு முதல் மேலும் 2 அணிகளை சேர்க்க திட்டமிட்டு வந்தார். ஏனெனில், அதானி மற்றும் சஞ்சீவ் கோயங்கா குழுமத்தினர் இரு புதிய ஐபிஎல் அணிகளுக்கு ஆர்வமாக இருந்தனர்.

இதனால் அடுத்த வருடமே 2 புதிய அணிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடந்த பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து மட்டுமே இந்த இரு அணிகளும் களமிறங்கும் என கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் பெரும்பாலான, அணி உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரை வருகிற ஏப்ரல் மாதத்தில் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வரும் பிப்ரவரி மாதம் வீரர்களுக்கான ஏலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள காரணத்தினால், இடைப்பட்ட மாதங்களில் மெகா ஏலம் நடத்த முடியாத நிலை உள்ளது. மெகா ஏலம் சாத்தியமில்லை என்றால் புது அணிகளை இணைப்பதும் சாத்தியமில்லை. இதனால், புது அணிகள் 2022ஆம் ஆண்டு முதல் மட்டுமே களமிறங்க வாய்ப்புள்ளது.

மேலும், போட்டியை நேரலை செய்யும் தொலைக்காட்சிக்கு 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 60 போட்டிகள் வரை மட்டுமே ஒளிபரப்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் 16,347.50 கோடி பிசிசிஐக்கு செலுத்துகின்றனர். புதிய அணிகளால் 94 போட்டிகள் என அதிகரித்தால் அவர்கள் மேலும் பெரிய தொகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனையும் பிசிசிஐ கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது. புதிதாக இணைக்க உள்ள அணிகள் லக்னோ மற்றும் அகமதாபாத்தை கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்