ஐபிஎல் மெகா ஏலம் : கிரிக்கெட் மீது கொண்ட காதல்.. எல்லைகளைக் கடந்து.. சாதிக்க துடிக்கும் இளம் வீரர்.. ஒரு 'Inspiring' ஸ்டோரி

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் ஒருவரின் கிரிக்கெட் அர்ப்பணிப்பு பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

Advertising
>
Advertising

ஐபிஎல் மெகா ஏலம், வரும் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில், பெங்களூரில் வைத்து நடைபெறவுள்ளது. இந்த முறை அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறது.

பத்து அணிகளும், ஏறக்குறைய ஒரு புதிய அணியையே இந்த மெகா ஏலத்தின் மூலம் உருவாக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் எப்படிப்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல, சிறந்த வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் தட்டித் தூக்கவும், ஐபிஎல் அணிகள் திட்டம் தீட்டி, தீவிரமாக தயாராகி வருகிறது.

வீரர்கள் பட்டியல்

மெகா ஐபிஎல் ஏலத்திற்காக, மொத்தம் 590 வீரர்கள் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில், அனுபவமுள்ள வீரர்கள் அதிகம் இருப்பதைப் போலவே, சமீபத்திய உள்ளூர் மற்றும் U 19 உலக கோப்பைத் தொடர்களில் ஜொலித்த துடிப்பான இளம் வீரர்களும், இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வருங்கால அணிக்கான அஸ்திவாரத்தை அமைக்கும் திட்டத்தை, ஏதேனும் ஐபிஎல் அணிகள் கட்டமைக்க முயற்சி மேற்கொண்டால், அப்படிப்பட்ட இளம் வீரர்களை நிச்சயம் குறி வைக்கும்.

தடையைத் தாண்டி சாதித்த இளம் வீரர்

ஐபிஎல் தொடரில், பட்டையைக் கிளப்பிய பல இளம் வீரர்கள், இந்திய அணியிலும் இடம் பிடித்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில், தன் முன்னுள்ள பல தடைகளைத் தாண்டி, இன்று ஐபிஎல் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு இளம் வீரரைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அமித் அலி

19 வயதே ஆகும் அமித் அலி என்ற இளம் வீரர், ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்று, பலரின் கவனத்தையும் பெற்று வருகிறார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அமித், ஒரு லெக் ஸ்பின்னர் ஆவார். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அமித் கடந்து வந்த பாதை, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள கமலாசாகர் என்னும் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்தவர் அமித் அலி.

தீவிர பயிற்சி

இந்தியா - வங்கதேசம் எல்லை பகுதி பிரிக்கப்பட்ட சமயத்தில், அமித்தின் வீடு மற்றும் அவரது கிராமத்தில் இருந்த சில பகுதிகள், வங்கதேச எல்லைக்கு சென்று விட்டது. என்ற போதும், அவர் ஒரு இந்திய குடியுரிமை பெற்றவர் ஆவார். இந்திய குடிமகனாக இருந்தாலும், கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள வேண்டி, இரு நாட்டின் எல்லைகளையும் கடந்து, திரிபுரா பகுதிக்கு சென்று, பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.

அடுத்தடுத்து வாய்ப்பு

சிறு வயது முதலே அமித்திற்கு படிப்பின் மீது அதிக ஆர்வமில்லாமல் இருந்து வந்துள்ளது. மகனின் எதிர்காலத்தை நினைத்து, அமித்தின் பெற்றோர்கள் வருத்தப்பட்ட நிலையில், மறுபக்கம் கிரிக்கெட் தான் தன்னுடைய வாழ்க்கை என அமித் அலி தீர்மானித்து விட்டார். தன்னுடைய விடா முயற்சியால், 2021 ஆம் ஆண்டு, விஜய் ஹசாரே தொடரில், திரிபுரா அணிக்காக ஆட, அமித்துக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, சையது முஷ்டாக் அலி தொடர் மூலம், டி 20 போட்டியிலும் அவர் அறிமுகமானார்.

வாய்ப்பு கிடைக்குமா?

இந்த இரு தொடர்களிலும், சிறப்பாக செயல்பட்டதன் மூலம், தற்போது அமித் அலியின் பெயர், ஐபிஎல் ஏல பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. வருங்கால இந்திய வீரர்களை உருவாக்கும் பணியில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டு வரும் நிலையில், அமித் அலி போன்ற ஒருவரையும் நிச்சயம் சில அணிகள் கவனித்திருக்கும்.

பெற்றோரின் கனவு

இதன் மூலம், தங்களின் மகன், ஐபிஎல் தொடரில் ஆட தேர்வாகி, பல சர்வதேச வீரர்களுடன் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைத்து, பெரிய ஆளாக வர வேண்டும் என அமித் அலியின் பெற்றோர்கள் கனவும் கண்டு வருகின்றனர். அவர்களின் கனவும் நனவாகி, அமித் அலி போன்ற பல இளைஞர்கள், ஐபிஎல் தொடரில் சாதிக்க வேண்டும் என்பதே, கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் விருப்பமாகவும் உள்ளது.

AMIT ALI, IPL AUCTION 2022, IPL 2022, ஐபிஎல், அமித் அலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்