‘அவரே கேப்டனா இருக்கட்டும்’... 'விராட் கோலிக்கு உருவான அடுத்த பிரச்சனை’... ‘ஆதரவு தெரிவித்த முன்னாள் வீரர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டெஸ்ட் அணியின் முழுநேர கேப்டனாக அஜிங்கியா ரஹானேவை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

விராட் கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டார். இதில் ஆஸ்திரேலிய அணியை சரியான திட்டமிடலால், பும்ரா, அஸ்வின், சிராஜ் உள்ளிட்ட வீரர்களை கொண்டு தோற்கடித்து ரஹானே வெற்றியும் பெற்றார். இதையடுத்து, ரஹானேவை டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டனாக்க வேண்டும் என்று ரசிகர்கள் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏனெனில், ரஹானே பவுலர்களை மதிக்கிறார், ஒரு லீடராக அணியை முன்னின்று வழி நடத்துகிறார் என்று அவரை முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர். முக்கியமாக ரஹானேவிடம் இருக்கும் பல நல்ல குணங்கள், விராட் கோலியிடம் இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. விராட் கோலி இந்திய அணியை ஒரு சர்வாதிகாரி போல நடத்துகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி செமி பைனல், பைனல் போன்ற போட்டிகளில் தோல்வி அடைய, அவரின் சர்வாதிகார திட்டமிடல் போக்குதான் காரணம். ஆனால் ரஹானே அப்படி இல்லை. அவர் மிகவும் அமைதியாக திட்டமிட்டு மற்றவர்களை பேச அனுமதிக்கிறார் என்று பிசிசிஐ அமைப்பில் முக்கிய நிர்வாகிகள் கருத தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அணியில் ஒரே கேப்டனுக்கு பதிலாக 2-3 கேப்டன்கள் இருக்கலாம் என்ற பேச்சுவார்த்தை எழுந்து வந்த நிலையில், ரஹானேவின் எழுச்சி இந்த பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தி உள்ளது. கேப்டன்சியில் முன்பு கோலிக்கு ரோகித் மட்டுமே தலைவலியாக இருந்தார். தற்போது ரஹானேவும் கோலிக்கு போட்டியாக மாறியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறுகையில், ‘ரஹானே தான் கேப்டனாக பொறுப்பு வகித்த 3 டெஸ்ட் போட்டிகளிலுமே 100 சதவீதம் வெற்றிபெற்றுள்ளார். இதனால் அவரை முழுநேர டெஸ்ட் அணி கேப்டனாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரையில், விராட் கோலி இயற்கையாகவே தன்னை ஆக்ரோஷமாக அவரை வெளிப்படுத்துவதால் ஏற்படும் சிக்கலால் இதுபோன்று கோரிக்கை வைக்கப்படுவதாக உணர்கிறேன்.

அவர் தன்னை வெளிப்படுத்தும் விதமே மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றன. விராட் கோலியின் தலைமையின் கீழ் மிக நீண்ட காலமாக இந்தியா நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தது. கடந்த 2018-2019-ல் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோலி சாதனை புரிந்தார். அடிலெய்டில் நடந்த தோல்வியை தவிர்த்து, இந்திய அணி தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது’ என்று கோலிக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். டி20 அணிக்கு ரோகித் சர்மாவும், டெஸ்ட் அணிக்கு ரஹானேவும், ஒருநாள் தொடருக்கு கோலியும் கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்