"'சிஎஸ்கே'வுக்கு பெரிய பிரச்சனை ஒன்னு இருக்கு.. அதுனால இந்த தடவையும் டவுட்டு தான்?!.." முன்னாள் வீரரின் 'பரபரப்பு' கருத்து!!.. அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் நெருங்கி வரும் நிலையில், இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில், புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடம் பிடித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமலே வெளியேறியிருந்தது. இதனால், தோனி உள்ளிட்ட சீனியர் வீரர்களின் பேட்டிங் கடுமையான விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த மினி ஐபிஎல் ஏலத்தில், புஜாரா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி எடுத்துக் கொண்டது. அது மட்டுமில்லாமல், கடந்த சீசனில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய சுரேஷ் ரெய்னாவும் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இதனால், சென்னை அணி பழைய ஃபார்முக்கு வந்து மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றின் காரணமாக, அனைத்து அணிகளுக்கும் பொதுவான மைதானங்களில் வைத்தே போட்டிகள் நடைபெறுகிறது. இதில், சென்னை அணிக்கு முதல் 5 போட்டிகள், மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது.


இதனால், சிஎஸ்கேவிற்கு சுழற்பந்து வீச்சில் கொடுக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டி கூட நடைபெறாது. ஆனால், போட்டி அட்டவணை வருவதற்கு முன்பே, சென்னை அணி அதிக சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் இணைத்துக் கொண்டது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), இந்த சீசனில் சென்னை அணி, கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு குறித்து பரபரப்பான கருத்து ஒன்றை கூறியுள்ளார். 'மும்பை பிட்ச்சானது, 70 சதவீதம் வரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பவை ஆகும். அங்கு அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

எனவே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைப்பு அளிக்காத மும்பை மைதானத்தில், ஸ்பின்னர்கள் பலம் கொண்ட சென்னை அணிக்கு, முதல் 5 போட்டிகள் நிச்சயம் தடுமாற்றமாக இருக்கும். அந்த அணியில் தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாம் குர்ரான், லுங்கி நிகிடி, ஹேசல்வுட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் அது மட்டுமே போதாது.

அதே போல, பேட்டிங் துறையில், எம்.எஸ். தோனி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் சர்வதேச மற்றும் முதல் தர போட்டிகள் என எதிலும் அதிகமாக ஆடவில்லை. மேலும், ஜடேஜா கூட காயத்தால், கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். உத்தப்பா, கெயிக்வாட் மற்றும் டுபிளஸ்ஸி ஆகியோர் மட்டும் தொடர்ந்து ஆடி வரும் நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் அதிகம் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடாமல் இருப்பது, நிச்சயம் சென்னை அணிக்கு பின்னடைவு தான்.

மும்பை மைதானத்தில், முதலில் பேட்டிங் செய்யும் அணி, 180 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். இதனால், சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், அங்கு நடைபெறும் முதல் 5 போட்டிகளில் சென்னை அணி 3 போட்டிகளில் வென்றாலே பெரிய விஷயம் தான். இப்படி ஒரு பேட்டிங் மற்றும் பந்து வீச்சு உள்ளதால், சென்னை அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் காணும்' என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்